நாளை குலுங்கப்போகும் டெல்லி.. 1 லட்சம் விவசாயிகள் படையெடுப்பு.. மீண்டும் போராட்டமா?திரும்பும் பாஜக
டெல்லி: நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் படையெடுத்து செல்கின்றனர். நாளை ராம்லீலா மைதானத்தில் நடக்கும் கிசான் மகாபஞ்சாயத்தில் அவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் தான் டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை கையில் எடுக்கலாம் என கூறப்படுவதால் மத்திய அரசு உஷாராக இந்த நிகழ்வை கவனிக்க தொடங்கி உள்ளதோடு, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை வாபஸ்பெறக் கோரி கடந்த 2020ம் ஆண்டு விவசாயிகள் டெல்லியில் பெரிய அளவில் போராட்டத்தை தொடங்கினர். 2020 ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி துவங்கிய இந்த போராட்டம் 2021 டிசம்பர் 11ம் தேதி வரை நடந்தது.
டெல்லி எல்லைகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொடர்ந்து பேராட்டம் நடத்தினர். ஓராண்டுக்கும் மேலாக இந்த போராட்டம் தொடர்ந்தது.

வாபஸ் பெறப்பட்ட வேளாண் சட்டங்கள்
இதையடுத்து மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றது. அதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இது விவசாயிகள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். மேலும் இந்த போராட்டத்தின் முடிவில் உணவு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பிற கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் டெல்லியில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என விவசாய அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர்.

கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தல்
இந்நிலையில் தான் டெல்லி போராட்டத்தின்போது மத்திய அரசு கூறிய வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். கடந்த முறை நடந்த டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இறந்த 740 விவசாயிகளின் குடும்பத்துக்கு நிவாரண நிதி அளித்தல், விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெறுதல், உணவு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல், உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர்கேரியில் விவசாயிகள் மீது வாகனம் ஏற்றி கொன்ற புகாரில் கைதானவரின் தந்தையான அஜய் மிஸ்ராவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவது, மின்சார சட்டதிருத்த மசோதா 2022 வாபஸ் பெறுதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

டெல்லியில் கிசான் மகாபஞ்சாயத்து
மேலும் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்துவது தொடர்பாக விவசாயிகள் அமைப்பினர் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே தான் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான பாரதிய கிஸான் மோர்ச்சா (பிகேஎம்) தனது மகாபஞ்சாயத்தை பல இடங்களில் நடத்தியது. இந்நிலையில் தான் நாளை டெல்லி ராம்லீலா மைதானத்தில் கிசான் மகாபஞ்சாயத்து நடைபெற உள்ளது. மகாபஞ்சாயத்து என்பது வடமாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அரசு சார்பில் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கைவிடவும், ஆதரவான திட்டங்கள், வாக்குறுதிகளை நிறைவேற்ற செய்யும்படி வலியுறுத்தும் கூட்டமாகும்.

லட்சக்கணக்கானவர்கள் படையெடுப்பு
இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அமைப்பு உறுதி செய்துள்ளது. இதுபற்றி அதன் தலைவர் தலைவர் தர்ஷன் பால், ‛‛2021 டிசம்பர் 9ம் தேதி எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு அளித்த உறுதிமொழிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். மேலும் விவசாயிகள் நலன்கருதி அவர்களுக்கான பிரச்சனைகளை களைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்காக நாளை டெல்லியில் மகாபஞ்சாயத்து நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். '' என்றார்.

உன்னிப்பாக கவனிக்கும் பாஜக
விவசாயிகள் அமைப்பு சார்பில் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் தான் இந்த மகாபஞ்சாயத்து நடைபெற உள்ளது. இதனால் இதனை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை கையில் எடுத்தால் அதனை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் இதில் மத்திய பாஜக அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும் நாளைய மகாபஞ்சாயத்தால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications