500 ஆண்டுகளுக்குப் பின் அயோத்தியில் ராமர் அமர்ந்த பின் முதல் தீபாவளி- பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
டெல்லி: "500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் உள்ள கோவிலில் ஸ்ரீ ராமர் அமர்ந்த பின்னர் இது முதல் தீபாவளி; பல தலைமுறையினர் இந்த தீபாவளிக்காக காத்திருக்கின்றனர்; பலர் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்; துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர். தற்போதைய தலைமுறையினர் இத்தகைய கொண்டாட்டங்களைக் காண்பதற்கும், அதில் பங்கேற்பதற்கும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் 51,000 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி இன்று பேசியதாவது: இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

அயோத்தி ஶ்ரீராமர் தீபாவளி: 500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் உள்ள தனது அற்புதமான கோவிலில் ஸ்ரீ ராமர் அமர்ந்த பின்னர் இது முதல் தீபாவளி. பல தலைமுறையினர் இந்த தீபாவளிக்காக காத்திருக்கின்றனர். பலர் அதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர் அல்லது துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர். தற்போதைய தலைமுறையினர் இத்தகைய கொண்டாட்டங்களைக் காண்பதற்கும், அதில் பங்கேற்பதற்கும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.
ஹரியானாவில் 26,000 பேருக்கு வேலைவாய்ப்பு: லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசுப் பணிகள் வழங்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக அமைக்கப்பட்ட அரசின் மூலம் 26,000 இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள ஹரியானாவில் கொண்டாட்டமான சூழல் நிலவுகிறது. எந்தச் செலவோ அல்லது சிபாரிசோ இல்லாமல் வேலை வழங்குவதில் ஹரியானாவில் உள்ள தங்கள் அரசு தனக்கான அடையாளத்தை உருவாக்கி உள்ளது.

காதி வர்த்தகம்: கடந்த 10 ஆண்டுகளில் அரசின் கொள்கைகளால் நாட்டின் காதித் தொழில் மாற்றமடைந்து கிராம மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காதி கிராம வர்த்தகம் தற்போது ரூ.1.5 லட்சம் கோடியை கடந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பை ஒப்பிடுகையில் கதர் விற்பனை 400 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் கலைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் வணிகர்கள் பயனடைந்துள்ளனர். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
லட்சாதிபதி சகோதரிகள் திட்டம்: கிராமப்புற பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலை வாய்ப்புகளை வழங்குகிறது லட்சாதிபதி சகோதரிகள் திட்டம். கடந்த பத்தாண்டுகளில் 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுய உதவிக் குழுக்களில் இணைந்துள்ளனர். தற்போது 10 கோடி பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை அரசு மேற்கொண்டுள்ளது. 1.25 கோடிக்கும் அதிகமான பெண்கள் ஏற்கனவே லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர், அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மேல் உள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு: இந்திய இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை பெறுவதை எளிதாக்க மத்திய அரசு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட இந்தியாவுக்கான ஜெர்மனியின் திறன் தொழிலாளர் திட்டத்தில் இந்திய இளைஞர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை ஜெர்மனி ஆண்டுதோறும் 20 ஆயிரத்திலிருந்து 90 ஆயிரமாக உயர்த்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்திய இளைஞர்கள் பெரிதும் பயனடைவார்கள். வளைகுடா நாடுகளைத் தவிர, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, மொரீஷியஸ், இஸ்ரேல், இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகள் உட்பட 21 நாடுகளுடன் குடிபெயர்வு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் இந்தியா சமீபத்திய ஆண்டுகளில் கையெழுத்திட்டுள்ளது. ஆண்டுதோறும் 3 ஆயிரம் இந்தியர்கள் இங்கிலாந்தில் வேலை செய்யவும், கல்வி கற்கவும் 2 ஆண்டு விசாவைப் பெறுகிறார்கள்; 3 ஆயிரம் இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications