ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
டெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து அமலாக்கத்துறையால் டெல்லி ஆம்ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் அமலாக்கத்துறையால் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் தான் டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்திய வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் அடுத்தடுத்து ஆம்ஆத்மி கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் அடுத்தடுத்து கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து ஆம்ஆத்மி கட்சியின் எம்எல்ஏவான அமானதுல்லா கான் இன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அமானுதுல்லா கான் டெல்லி புதிய மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் கைது செய்யப்படவில்லை. மாறாக வக்ஃபு வாரிய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி அமானதுல்லா கானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதையடுத்து இன்று அமானுதுல்லா கான் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை இறுதியி்ல கைது செய்தது.
முன்னதாக டெல்லி வக்ஃபு வாரியத்தில் சட்ட விரோதமாக ஆட்களை பணியமர்த்த குறிப்பிட்ட தொகையை பெற்றுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ விசாரணையை தொடங்கியது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதும், அந்த பணத்தின் மூலம் அவர் தனது கூட்டாளிகள் பெயரில் சொத்துகள் வாங்க முயன்றதும் தெரியவந்த நிலையில் அமலாக்கத்துறையும் விசாரைணயில் குதித்தது.
மேலும் அமானதுல்லா கானுக்கு சொந்தமான இடத்தில் ரெய்டுகள் நடத்தப்பட்ட சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக இன்று அமானதுல்லா கானிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில் அதிரடியாக கைது செய்துள்ளது. இந்நிலையில் தான் அமானதுல்லா கான் கைதை ஆம்ஆத்மி கட்சியினர் கண்டித்துள்ளனர். ஆம்ஆத்மி கட்சியின் செயல்பாட்டை தடுக்க பாஜக சர்வாதிகாரத்தை கையில் எடுத்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. மேலும் எத்தனை பேரை கைது செய்தாலும் கூட ஆம்ஆத்மி அஞ்சாமல் பாஜகவை எதிர்த்து போராடும் என முழங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications