வக்பு வாரிய மசோதா.. வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்! ஆம் ஆத்மியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி: வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில், இந்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மனு தாக்கல் செய்து வருகின்றன. காங்கிரஸ், ஓவைசியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியும் தற்போது மனு தாக்கல் செய்துள்ளது.
வக்பு வாரிய திருத்த மசோதா கடந்த 2 ஆம் தேதி நாடாளுமன்ற லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் மசோதா மீதான விவாதம் நள்ளிரவு வரை நீடித்தது. சுமார் 12 மணி நேரத்துக்குப் பின் நள்ளிரவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 288 வாக்குகள் பெற்று மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு எதிராக 232 வாக்குகள் பதிவானது.

இரு அவைகளிலும் நிறைவேறியது
லோக்சபாவில் மசோதா நிறைவேறியதை தொடர்ந்து மாநிலங்களவையில் 3 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு மசோதாவை தாக்கல் செய்து எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரினார். இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளைச் சார்ந்த எம்.பிக்கள், வக்பு சட்டத் திருத்த மசோதாவை கடுமையாக எதிர்த்துப் பேசினர். திமுக சார்பில் திருச்சி சிவா வக்பு வாரிய மசோதாவை கடுமையாக விமர்சித்தார்.
ராஜ்யசபாவில் 13 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு வாக்கெடுப்பு மூலம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. மேல்சபையில் வக்பு திருத்த மசோதா குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியுள்ள நிலையில், இந்த மசோதா அடுத்ததாக குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சட்டமாக்கப்படும்.
ஆம் ஆத்மி கட்சியும் வழக்கு
இதற்கிடையே, வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்தன. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையிலே இந்த அறிவிப்பை வெளியிட்டார். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வழக்கு தொடர முடிவு செய்தன. இதன்படி, காங்கிரஸ் கட்சி நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதேபோல ஐதராபாத் எம்பி அசாதுதின் ஓவைசி கட்சியும் இந்த மசோதாவுக்க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில், இன்று ஆம் ஆத்மி கட்சியும் வழக்கு போட்டுள்ளது. வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக உசச் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள மூன்றாவது கட்சி ஆம் ஆத்மியாகும். மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ கூறுகையில், இந்த மசோதா மதத்தில் தலையிடாது, மாறாக வெறும் சொத்து நிர்வாகத்துடன் மட்டுமே தொடர்புடையது. 2004-ம் ஆண்டு 4.9 லட்சம் வக்பு சொத்துகள் இருந்த நிலையில், தற்போது அது 8.72 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.
மேற்பார்வையிட மட்டுமே
வக்பு விவகாரத்தில் முந்தைய அரசுகளின் நிறைவேற்றப்படாத பணிகளை நிறைவேற்றுவதே இதன் நோக்கமாகும். நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் என இங்கே கூறப்பட்டு இருக்கிறது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது, சட்ட விரோதமானது மற்றும் முஸ்லிம்களின் உரிமை பறிக்கப்படும் என பலரும் கூறுகிறார்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட சொத்துகள் மற்றும் ஏற்கனவே தீர்வு காணப்பட்ட வழக்குகளை நாங்கள் மீண்டும் தொந்தரவு செய்யமாட்டோம். நாங்கள் யாருடைய மத நம்பிக்கையையும் சேதப்படுத்த இங்கே வரவில்லை. இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. நாங்கள் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. வக்பு வாரியம் வக்பு சொத்துக்களை நிர்வகிக்க அல்ல, மேற்பார்வையிட மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications