டெல்லி மீட்டிங் ஓவர்.. ஜூலை 26ல் பாஜக எம்எல்ஏக்களை சந்திக்கும் எடியூரப்பா.. என்ன நடக்கிறது?
பெங்களூர்: கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா பதவி விலக போவதாக செய்திகள் வெளியான நிலையில் ஜூலை 26ம் தேதி பாஜக எம்எல்ஏக்களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்த உள்ளார்.
கர்நாடக அரசியல் குழப்பம் கன்னித்தீவு தொடர் போல முடியாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. முதல்வர் எடியூரப்பா இப்போது பதவி விலகுவார், அப்போது பதவி விலகுவார் என்று ஒவ்வொரு நாளும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
கர்நாடக பாஜகவில் எடியூரப்பாவிற்கு எதிராக வலுவாக பலர் குரல் கொடுத்து வரும் நிலையில், எடியூரப்பா முதல்வராக நீண்ட காலம் நீடிக்க முடியாது என்றே கூறப்படுகிறது. கட்சியில் இருக்கும் மூத்த எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் எடியூரப்பாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

எதிர்ப்பு
எடியூரப்பாவின் ஆட்சி முறை பிடிக்கவில்லை, அவர் எம்எல்ஏக்களை அணுகும் விதம் சரியில்லை, அவர் எடுக்கும் முடிவுகள் சரியில்லை, குடும்ப உறுப்பினர்களில் தலையீடு உள்ளது என்று கட்சிக்கு உள்ளேயே சில முக்கிய நிர்வாகிகள் எடியூரப்பாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கர்நாடகா சுற்றுலாத் துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வரா மற்றும் ஹூப்ளி மேற்கு எம்.எல்.ஏ., அரவிந்த் நேராக டெல்லிக்கே சென்று இது பற்றி பாஜக தலைமையிடம் புகார் வைத்தனர். இன்னும் பல மூத்த நிர்வாகிகள் எடியூரப்பாவிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

குரல்
இந்த நிலையில்தான் நேற்று திடீரென எடியூரப்பா ராஜினாமா செய்ய போவதாக செய்திகள் வந்தன. எடியூரப்பா ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டார், புதிய முதல்வர் விரைவில் பதவி ஏற்பார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. எடியூரப்பா நேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டாவுடன் ஆலோசனை நடத்திய பின் இது தொடர்பான செய்திகள் வந்தன.

மறுப்பு
இந்த சந்திப்பில் தேசிய தலைமை எடியூரப்பாவை பதவி விலக சொன்னதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார். தேசிய தலைவர்கள் என்னை முதல்வராக தொடரும்படி கூறினார்கள். கட்சியை பலப்படுத்தும்படி என்னிடம் அறிவுறுத்தினார்கள்.

எங்கள் பணி
தேசிய தலைமையின் அறிவுரையை அவ்வப்போது பெறுவது எங்களின் கடமை. ஆட்சிக்கான தலைமையை மாற்றுவது குறித்து எந்த பேச்சும் நடக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. லோக்சபா தேர்தலிலும், சட்டசபையிலும் பாஜக அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்று தேசிய தலைமை என்னிடம் கூறியுள்ளது. இதற்காக கட்சியை வலுப்படுத்த என்னிடம் கூறியுள்ளனர்.

உண்மை இல்லை
நான் பதவி விலக போவதாக வெளியான செய்திகள் எதிலும் உண்மை இல்லை. இப்போதைக்கு முதல்வரை மாற்றும் முடிவில் தேசிய தலைமை இல்லை என்று நேற்று எடியூரப்பா குறிப்பிட்டார். இவரின் பதவி விலகல் குறித்து பல செய்திகள் வெளியான நிலையில் எடியூரப்பா இப்படி தெரிவித்தார். இந்த நிலையில்தான் கட்சி எம்எல்ஏக்களுடன் எடியூரப்பா மீட்டிங் நடத்த உள்ளார்.

ஜூலை 26
வரும் ஜூலை 26ம் தேதியோடு கர்நாடகாவில் 2 வருட ஆட்சியை எடியூரப்பா முடிக்கிறார். அதே நாளில் பாஜக எம்எல்ஏக்களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்த உள்ளார். கட்சியில் தனக்கு நிலவும் எதிர்ப்பு குறித்தும், எம்எல்ஏக்களிடம் நிலவும் அதிருப்தி குறித்தும் எடியூரப்பா இந்த மீட்டிங்கில் பேச இருக்கிறார்.












Click it and Unblock the Notifications