அன்றும் இன்றும்... வட இந்தியாவில் ரயில்கள் பற்றி எரிய காரணம்.. வேலைவாய்ப்பின்மைதான்!
டெல்லி: வட இந்தியாவில் மீண்டும் ரயில்கள் பற்றி எரிகின்றன.. ரயில் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன.. கடந்த ஜனவரி மாதம் போலவே இந்த ஜூன் மாதமும் அதே மாதிரியான போராட்டங்கள் வெடித்து கிளம்பியிருக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் ரயில்வே தேர்வால் வெடித்தது போராட்டம். மொத்தம் 35,000 பணியிடங்களுக்கு 1.25 கோடி பேர் விண்ணப்பித்திருந்ததனர். கடந்த 2020 ஏப்ரல் - ஜூலை மாத காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக இத்தேர்வு நடந்தது. இது 133 ஷிப்டுகளாக 68 நாட்களாக நடந்தது.
இந்த தேர்வு முடிவுகள்தான் கடந்த ஜனவரியில் வெளியானது. ரயில்வே வேலைகளை எதிர்பார்த்து காத்திருந்த வட இந்தியர்கள் பலருக்கும் பெரும் ஏமாற்றம். இதனால் தேர்வுகளில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக தேர்வு எழுதியோர் குற்றம் சாட்டினர்.

பீகார் ரயில் எரிப்பு
இந்த கோபம் மெல்ல மெல்ல போராட்டமாக வெடித்தது. பீகார் மாநிலம் கயா ரயில் நிலையம் அருகேதான் இந்த புயல் முதலில் மையம் கொண்டது. கயா ரயில் நிலையத்துக்குள் நுழைந்த தேர்வர்கள் ரயில்கள் மீது கல்லெறிந்தனர். அப்போது Shramjeevi Express ரயிலுக்கும் தீ வைக்கப்பட்டது. அத்துடன் கயா ரயில் நிலையமும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. கயாவில் பற்ற வைத்த இந்த நெருப்பு வட இந்தியா முழுமைக்கும் பரவியது.

அக்னிபாத் மீது ஆத்திரம்
இதற்கு காரணம் தங்களுக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது என்பதுதான். இப்போதும் அதே பாணியிலான இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டமே வெடித்திருக்கிறது. இதற்கும் காரணம் அக்னிபாத் ஆட்சேர்ப்பு கொள்கை மூலமாக தங்களுக்கான ராணுவ பணி மறுக்கப்படுகிறது; ராணுவ பணி தங்களுக்கு பாதுகாப்பானது என்பது கேள்விக்குறியாகிறது என்கிற கொந்தளிப்புதான்.

பதற்றத்தின் பின்னணி
வட இந்தியர்களைப் பொறுத்தவரையில் ரயில்வே, ராணுவம் போன்ற பணிகளை பெரிதும் நம்பி இருக்கின்றனர். இந்த பணிகள் தங்களுக்கு எப்படியாவது கிடைத்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாகவும் முறைகேடுகளுக்கும் துணிந்தவர்களாகவும் உள்ளனர். அப்படியான ஒரு தவிப்பின் பிடியிலான சூழலில் தங்களுக்கு எதுவுமே சாத்தியமில்லை என்கிற தகவல் லேசாக கசிகிற போதே பதற்றத்துக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கப்பட்டு வீதிகளில் இறங்கிவிடுகின்றனர்.

பதற்றத்தை தரும் அக்னிபாத்
இத்தகைய பாதுகாப்பற்ற தன்மை, தங்களுக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறதே என்கிற கொந்தளிப்பு இவைதான் இப்போதும் அப்போதும் பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களை பற்றி எரிய வைத்திருக்கிறது. 1990களில் மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிராக ஆதிக்க ஜாதியினர் கிளப்பிவிட்ட பீதியால் அன்றும் வட இந்தியா மட்டும்தான் எரிந்தது. ஏறத்தாழ அதே போன்ற ஒரு சூழ்நிலையில் இப்போது அக்னிபாத் திட்டத்தால் எரிதனலில் சிக்கி தகித்துக் கொண்டிருக்கிறது வட இந்தியா. இத்தனை கோபங்களுக்கும் ஒற்றைக் காரணம் வேலைவாய்ப்பின்மை எனும் கொள்ளிதான்!












Click it and Unblock the Notifications