அயோத்தி தீர்ப்பை ஏற்பது.. நம் கலாச்சாரத்தின் சகிப்பு தன்மையை பிரதிபலிக்கிறது.. பிரதமர் மோடி உரை
டெல்லி: தீர்ப்பை ஏற்றுக்கொள்வது நமது கலாச்சாரத்தின் சகிப்பு தன்மையை பிரதிபலிக்கிறது என்றும் புதிய தொடக்கத்திற்கான நேரம் வந்துவிட்டது என்றும் பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இந்துக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் முஸ்லீம்களுக்கு அதற்கு பதில் 5 ஏக்கர் நிலத்தை அயோத்தில் வேறு இடத்தில் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பாக நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றி பிரதமர் மோடி பேசுகையில், "நீண்டகாலமாக நடைபெற்ற அயோத்தி நில உரிமை வழக்கு தீர்ப்பு மூலமாக முடிவுக்கு வந்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ஒருமனதாக தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்சநீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது நிரூபணமாகியுள்ளது.
வரலாற்று தருணம்
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். நீதி, நியாயம் மீதான மக்களின் நம்பிக்கை வலுப்பெற்றிருக்கிறது. தீர்ப்பை ஏற்றுக்கொள்வது நமது கலாச்சாரத்தில் சகிப்பு தன்மையை பிரதிபலிக்கிறது. புதிய தொடக்கத்திற்கான நேரம் வந்துவிட்டது.
புதிய பாதை
கர்தார்பூரில் புதிய வழித்தடம் திறக்கப்பட்டது போல இங்கே புதிய பாதை உருவாகியுள்ளது. வேற்றுமையும், எதிர்மறை எண்ணங்களும் மறைந்த தினம் இன்று. தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு; புதிய இந்தியாவில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடமில்லை. நமது ஜனநாயகம் எவ்வளவு பல பொருந்தியது என்று உலகமே கண்டுள்ளது. நமது ஒற்றுமையே புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்" என்றார்.
ரஹீம் பக்தி
முன்னதாக பிரதமர் மோடி இந்த தீர்ப்பு குறித்து டுவிட்டரில், "அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல.. தோல்வியும் அல்ல. சமநிலையில் வழங்கப்பட்ட தீர்ப்பு. அது ராம் பக்தி அல்லது ரஹீம் பக்தி என இருந்தாலும் தேச பக்தி உணர்வை நாம் வலிமைப்படுத்துவோம். சட்டத்தின் நடைமுறையின்படி எப்படிப்பட்ட பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.
நீதித்துறை சுதந்திரம்
நமது நீதித்துறையின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, தொலைநோக்கு ஆகியவை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என்பதை தெளிவாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உணர்த்துகிறது. நீண்டகால விவகாரத்துக்கு நீதித்துறை சுமூகமான முறையில் தீர்வை கொடுத்துள்ளது. அனைத்து தரப்புக்கும் போதுமான அவகாசம் வழங்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அமைதி- சமாதானம்
இத்தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தேசத்தின் 130 கோடி மக்கள் கடைபிடிக்கும் அமைதியும் சமாதானமும் இணைந்த வாழ்க்கை மீதான உறுதியை வெளிப்படுத்துகிறது. இது நமது தேசத்தின் வளர்ச்சிப் பாதைக்கான ஆற்றலை வழங்கட்டும்" என்று கூறியிருந்தார்.