மீண்டும் மோடி.. அதே டாப் இடத்தில்.. என்ன நடந்தாலும் உலகளவில் முதலிடத்தை விடாத பிரதமர்! புது சர்வே
டெல்லி: சர்வதேச அளவில் மிகவும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலை மார்னிங் கன்சல்ட் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதில் பிரதமர் மோடி வழக்கம் போல ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
நமது நாட்டில் அடுத்தாண்டு தான் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்தே தீர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதற்கான பணிகளை அவர்கள் இப்போதே தொடங்கிவிட்டனர்.
இந்தாண்டு கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் பெரும்பாலும் பாஜகவே ஆட்சியில் இருக்கும் நிலையில், அதையும் தக்க வைக்கவே பாஜக விரும்புகிறது.

பாஜக
மாநில பாஜக அரசுகள் மீது மக்கள் அதிருப்தியில் இருந்தாலும் கூட, மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அவர்கள் திட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு தேர்தல்களிலும் இதற்கு நல்ல பலனுக்கும் கிடைத்து வருகிறது. மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் தேர்தல்கள், அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்த தரவுகளை வழங்கும் தளமாகும்.

மார்னிங் கன்சல்ட்
குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இப்போது புதிய பட்டியலை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு எந்தளவு செல்வாக்கு உள்ளது என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம். இந்தப் பட்டியலில் கடந்த காலங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே ஆதிக்கம் செலுத்தி வந்தார்.

டாப் இடத்தில் பிரதமர் மோடி
இந்தாண்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இந்தாண்டும் உலகின் பிரபலமான தலைவராகப் பிரதமர் நரேந்திர மோடி உருவெடுத்துள்ளார். மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் இந்த ரேங்கிங்கை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பிரதமர் மோடி மிகவும் நேசிக்கப்பட்ட மற்றும் போற்றப்பட்ட தலைவராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பவர்புல் நபர்
கடந்த மார்ச் 22 முதல் 28 வரை பெறப்பட்ட டேட்டா அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும் 18 வயதுக்கு மேலானவர்களிடம் ஏழு நாள் சராசரி அடிப்படையில் இந்த பட்டியலை உருவாக்கியுள்ளனர். மார்னிங் கன்சல்ட்டின் இந்த ரேங்கிங் அடிப்படையில் பிரதமர் மோடி 76% வாக்குகளுடன் முதல் இடத்தில் உள்ளார். முன்னதாக கடந்த வாரம் வெளியான இந்தியாவின் பவர்புல் நபர்கள் பட்டியலிலும் பிரதமர் மோடி டாப் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த இடங்கள்
மார்னிங் கன்சல்ட்டின் இந்தப் பட்டியலில் மோடி முதல் இடத்தில் இருக்கும் நிலையில், மெக்சிகோ நாட்டின் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 61% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அந்தோனி அல்பானீஸ் (ஆஸ்திரேலியா) 55% மற்றும் அலைன் பெர்செட் (சுவிட்சர்லாந்து) 53% ஆகியோர் 3 மற்றும் 4ஆவது இடத்தில் உள்ளனர். லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (பிரேசில்) 49%, ஜியோர்ஜியா மெலோனி (இத்தாலி) 49%, ஜோ பைடன் (அமெரிக்கா) 41% ஆகியோர் 5 முதல் 7 இடங்களைப் பிடித்துள்ளனர்.

ரிஷி சுனக்
பெல்ஜியம் நாட்டின் அலெக்சாண்டர் டி குரூ 39% வாக்குகளுடன் 8ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ (கனடா) 39%, பெட்ரோ சான்செஸ் (ஸ்பெயின்) 38% ஆகியோர் 9 மற்றும் 10ஆவது இடத்தில் உள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் 34% ஆதரவுடன் 13ஆவது இடத்தில் உள்ளார். அதேபோல ஜப்பான் பிரதமர் 16ஆவது இடத்திலும் தென் கொரியப் பிரதமர் 16ஆவது இடத்திலும் உள்ளனர்.

லாஸ்ட் 3 இடங்கள்
ஆன்லைன் வாயிலாக சர்வே நடத்தி இந்தப் பட்டியலை அவர்கள் உருவாக்கியுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு ஒரு இடம் சரிந்துள்ளார். மொத்தம் 22 நாடுகளில் இருந்து பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், செக் குடியரசு பிரதமர் பெட்ர் ஃபியாலா, பிரான்சின் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் தென் கொரிய அதிபர் யூன் சியோக்-யூல் ஆகியோர் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications