இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டம் அறிமுகம்.. 4 வருட ஒப்பந்தத்தில் வீரர்களை பணியமர்த்த முடிவு!
இந்திய ராணுவத்தில் அக்னி பாத் திட்டம் அறிமுகம்
டெல்லி: இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னி வீர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர்.
Recommended Video
மத்திய அமைச்சரவை இந்த புதிய பணி நியமன முறைக்கு இன்று ஒப்புதல் அளித்தது. இந்த புதிய பணி நியமன முறை ராணுவத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும், ராணுவத்தில் இளைஞர்கள் சேர ஊக்குவிக்கும். இந்திய ராணுவம் எப்போதும் இளமையானதாக இருக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை இது உருவாக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 22 பேருக்கு என்ன ஆனது? - தீவிர மீட்புப் பணியில் நேபாள ராணுவம்!
என்ன திட்டம்
முப்படை தளபதிகள் மூலம் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியிடம் இந்த திட்டம் குறித்து முப்படை தளபதிகள் கடந்த வாரம் விளக்கிய நிலையில் இன்று இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்னி பாத் திட்டம் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.
சம்பளம்
மொத்தம் 45 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கு வயது வரம்பு 17.5 - 21 வயது வரை இருக்கும். 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அவர்களுக்கு மெடிக்கல் மற்றும் இன்சூரன்ஸ் சேவைகளும் வழங்கப்படும். 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
என்ன நடக்கும்
இதில் நிரந்தர பணிக்கு தேர்வாகாத மீதம் உள்ள 75 சதவிகித அக்னி வீர் வீரர்கள்.. பென்ஷன் இல்லாமல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அதாவது 17.5 வயதில் இருந்து.. 21 வயது வரை 4 வருடங்கள் ஒருவர் விரும்பினால், அதற்கான தேர்வுகளை எழுதி ராணுவத்தில் 4 வருட கால பணிகளை செய்ய முடியும். பின்னர் அதில் 25 சதவிகித பேர் நீண்ட கால வீரர்கள் ராணுவத்தில் பணிக்கு சேர்க்கப்படுவார்கள் என்பதே இந்த திட்டத்தின் சுருக்கம். ராணுவ பட்ஜெட்டில் 5.2 லட்சம் கோடி ரூபாயில் கிட்டத்தட்ட பாதிக்கு பாதி சம்பளம் மற்றும் பென்ஷனுக்கு செல்கிறது. இந்த திட்டம் மூலம் அந்த செலவு பெரிய அளவில் குறையும்.
செலவு குறையும்
இந்த அக்னி பாத் திட்டம் மூலம் சேரும் ராணுவ வீரர்களுக்கு சம்பளம் மற்ற நிரந்தர வீரர்களை விட குறைவாக இருக்கும். அதேபோல் இவர்களுக்கு பென்சன் கிடையாது. இதன் காரணமாக கூடுதல் ராணுவ வீரர்கள் குறைந்த நிதி செலவில் ராணுவத்தில் பணியில் இருப்பார்கள். இதன் காரணமாக மத்திய அரசுக்கு செலவு மிச்சம் ஆகும். இதனால் மிச்சமாகும் தொகையை ராணுவ தளவாட பொருட்கள் வாங்க பயன்படுத்த முடியும் என்று என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.