"அக்னிவீர் திட்டத்தை நீக்கலாமே.." மோடிக்கு முதல் செக்? நிதிஷ் தரப்பு போடும் பரபர கண்டிஷன்!
டெல்லி: பாஜகவுக்கு ஆரம்பத்திலேயே செக் வைக்கும் வகையில் அக்னிவீர் திட்டத்தை நீக்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று நிதிஷ் குமார் நிபந்தனை வைப்பதாகக் கூறப்படுகிறது..
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில் இப்போது ஆட்சி அமைக்கக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு நிச்சயம் தேவை என்ற சூழல் உருவாகி உள்ளது.

ஆதரவு தேவை: குறிப்பாக 16 இடங்களை வைத்துள்ள தெலுங்கு தேசம், 12 சீட்களை வைத்திருக்கும் நிதிஷ்குமார் கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு நிச்சயம் தேவைப்படுகிறது. இதனால் அந்த இரு கட்சிகளும் சில நிபந்தனைகளையும் விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே தொடக்கத்திலேயே மோடி அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் அக்னிவீர் திட்டத்தை நீக்குவது குறித்து யோசிக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கட்சியில் இருந்து குரல்கள் வரத் தொடங்கியுள்ளது.
அக்னிவீர்: லோக்சபா தேர்தல் முடிவுகளில் அக்னிவீர் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஜேடியு தரப்பு நம்புகிறது. இந்த அக்னிவீர் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்குப் பாதுகாப்புப் படைகளில் பணிபுரிவார்கள். அதன் பிறகு, 25% அக்னி வீரர்கள் மட்டுமே அங்கே தொடர்வார்கள். மீதமுள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
கடந்த 2022இல் இந்தத் திட்டம் முதலில் அமல்படுத்தப்பட்ட நிலையில், அப்போது முதலே இது ராணுவத்திற்குத் தயாராவோர் மத்தியில் கடும் எதிர்ப்பையே கிளப்பி இருந்தது. குறிப்பாகப் பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து ராணுவத்திற்கு அதிகளவில் செல்வார்கள். அங்கெல்லாம் கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியும் கூட ஆட்சிக்கு வந்தால் அக்னிவீர் திட்டத்தை நீக்குவோம் என வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பு: என்டிஏ கூட்டணியிலேயே பல கட்சிகளுக்கு இந்தத் திட்டத்தில் பெரியளவில் உடன்பாடு இல்லை. இப்போது பாஜக ஆட்சி அமைக்க ஜேடியு ஆதரவு முக்கியம் என்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆரம்பமே பாஜகவுக்கு செக் வைக்கும் விதமாக அக்னிவீர் திட்டத்தை நீக்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜேடியு தரப்பு தெரிவித்துள்ளது.
நீக்கலாம்: இது குறித்து ஜேடியு செய்தித் தொடர்பாளர் கேசி தியாகி கூறுகையில், "அக்னிவீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதற்கு நல்ல வரவேற்பு இல்லை. மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். தேர்தல்களிலும் அதன் தாக்கத்தை நாங்கள் கண்டோம். எனவே இந்த ராணுவ ஆட்சேர்ப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
அக்னிவீர் திட்டத்தால் ஒரு பகுதி மக்கள் கலக்கமடைந்துள்ளனர். பொதுமக்கள் இதில் இருக்கும் பல குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்.. அந்த குறைகள் குறித்து விரிவாக ஆலோசித்து, அவற்றை நீக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்..
பொது சிவில் சட்டம் குறித்து ஏற்கனவே நிதிஷ்குமார் சட்ட கமிஷன் தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு நாங்கள் எதிராக இல்லை.. ஆனால், அனைத்து தரப்பு உடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என விரும்புகிறோம்" என்றார். அதேநேரம் பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கும் ஆதரவு தரத் தாயாராக இருப்பதாக கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க முக்கிய துறைகளையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜகவுக்கு நிதிஷ்குமார் தரப்பு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. 3 அமைச்சர் பதவி, 2 இணை அமைச்சர்கள் பதவிகளையும் நிதிஷ் தரப்பு கேட்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications