பாஜகவுக்கு திடீரென பிரதமர் மோடி கொடுத்த நன்கொடை.. எவ்வளவு தெரியுமா! மொத்தம் கிடைத்த நன்கொடை எவ்வளவு
டெல்லி: லோக்சபா தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், பாஜகவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்கொடை வழங்கியுள்ளார். இது குறித்த அவரது போஸ்ட் டிரெண்டாகி வருகிறது.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும் இந்த பொதுத்தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கும்.

இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
பாஜக: இதில் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில் பாஜக நேற்று தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உட்பட 195 பேரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது. மற்ற தொகுதிகளுக்கும் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது.
பிரதமர் மோடி: இது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் இந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பொதுமக்களிடம் நன்கொடை பெறும் நடவடிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கியுள்ளன. ஏற்கனவே தேர்தல் பத்திரங்களுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில், மாற்று வழிகளில் நன்கொடை பெறும் முயற்சியில் அரசயல் கட்சிகள் இறங்கியுள்ளனர். இதற்கிடையே லோக்சபா தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பாஜகவுக்கு நன்கொடை வழங்கியுள்ளார். அவர் பாஜகவுக்கு ரூ.2000ஐ நன்கொடையாக வழங்கியுள்ளார்.
மேலும், வலிமையான தேசத்தைக் கட்டியெழுப்ப நமோ செயலி மூலம் நன்கொடை செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "பாஜகவுக்கு நான் நன்கொடை வழங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.. சிறந்த பாரதத்தை உருவாக்க எங்கள் முயற்சிகளை வலுப்படுத்துகிறேன். நமோ செயலி மூலம் இந்த நன்கொடை பிரச்சாரத்தில் அனைவரும் இணைந்து முடிந்த தொகையை நன்கொடையாகத் தாருங்கள்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நன்கொடை: லோக்சபா தேர்தலுக்காக நன்கொடை பெறும் திட்டத்தைக் கடந்த மார்ச் 1ஆம் தேதி அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக அவர் பாஜகவுக்கு 1,000 ரூபாய் நன்கொடையாக அளித்தார். அது தொடர்பான படத்தைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அவர், "இந்தியாவைச் சிறந்த தேசமாக ஆக்க பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு எனது தனிப்பட்ட ஆதரவை அளிக்கும் வகையில் நான் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளேன். நமோ செயலி மூலம் அனைவரும் நன்கொடை தருவோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
எவ்வளவு நன்கொடை: நாட்டிலேயே அதிகம் நன்கொடை பெறும் அரசியல் கட்சிகளாக பாஜக இருக்கிறது. கடந்த 2022-2023 நிதியாண்டில் பாஜக ரூ. 719 கோடி நிதியை வசூலித்து இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 17 சதவீத அதிகமாகும். கடந்த 2021-2022ல் பாஜகவுக்கு ரூ.614 கோடி நன்கொடை கிடைத்தது.
மறுபுறம் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அதன் நன்கொடை தொடர்ந்து குறைந்து வருகிறது. 2021-2022 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு 95.4 கோடி நன்கொடை கிடைத்த நிலையில், அது 2022-2023 நிதியாண்டில் 79 கோடியாகக் குறைந்தது. அனைத்து அரசியல் நன்கொடைகளுக்கும் வருமான வரிச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications