என்னது! ஓபிஎஸ்-க்கு இன்னும் வாய்ப்பு இருக்கா? தேர்தல் ஆணையத்தின் அந்த ஒரு பாயிண்ட் சொல்வது என்ன?
டெல்லி: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது ஓ பன்னீர் செல்வத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனினும் தேர்தல் ஆணையத்தின் ஒரு பாயிண்ட் ஓ பன்னீர் செல்வத்த்திற்கு சாதகமாக இருக்கிறது. அது என்ன என்று பார்க்கலாம்.
அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2017- ஆம் ஆண்டு ஓ பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்த பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

ஆனால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை கோஷம் எழுந்தது. இதனால், தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவின் பொதுகுழு செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் நடத்திய சட்ட போராட்டத்தில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று அறிவித்தது. இதையடுத்து பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில், அதிமுக பொதுச்செயாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே, கர்நாடக தேர்தலில் போட்டியிட ஏதுவாக பொதுச்செயலாளராக அங்கீரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் முடிவை எடுக்க உத்தரவிட்டு இருந்தது.
இந்த கெடு நாளைக்குள் முடிவடைய உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு மூலம் அதிமுக முழுமையாக எடப்பாடி வசம் சென்றுள்ளது. ஓ பன்னீர் செல்வத்தை பொறுத்தவரை அரசியல் ரீதியாக அவருக்கு ஏற்பட்ட பெரிய பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது. ஓ பன்னீர் செல்வத்திற்கு இனி சட்ட ரீதியான வாய்ப்புகள் உள்ளதா என்று பார்ப்போம்.

* தேர்தல் ஆணையத்தின் இந்த உத்ததரவுக்கு எதிராக ஒ பன்னீர் செல்வம் தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடலாம். அதேபோல உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம்.
இந்த விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்புக்கு ஒ பன்னீர் செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த போது, தேவைப்படும் பட்சத்தில், எங்கே மனு தாக்கல் செய்ய வேண்டுமோ.. எங்கே முறையீடு செய்ய வேண்டுமோ.. அங்கே முறையீடு செய்யலாம் என்று தெரிவித்து இருந்தது. எனவே தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து பிறப்பித்த உத்தரவில் கூட தற்போது எடுக்கப்பட்டு இருக்கும் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டவை என்றே சொல்லியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவு இபிஎஸ்க்கு கிடைத்த பெரும் வெற்றியாக இருந்தாலும் சட்ட ரீதியில் ஓபிஎஸ்க்கான கதவுகள் இன்னும் முழுமையாக மூடப்படவில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications