மத்திய அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றம்... பிரதமர் மோடி தீவிர ஆலோசனை- வாய்ப்பு கனவில் அதிமுக!
டெல்லி: மத்திய அமைச்சரவையில் விரைவில் மிகப் பெரிய மாற்றங்களை மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது தங்களுக்கும் இடம் கிடைக்கும் என்பது அதிமுகவின் நம்பிக்கை.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் தற்போது 60 பேர் இடம்பெற்றுள்ளனர். மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோருடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனைகளை நடத்தினார்.

அமைச்ச்ரவை மாற்றம்
அமைச்சரவை மாற்றத்துக்காகவே இந்த ஆலோசனை நடத்தப்பட்டது. அத்துடன் டெல்லியில் பாஜகவின் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து வருகின்றனர்.

அமைச்சர்கள் எண்ணிக்கை 79?
மாற்றி அமைக்கப்படும் அமைச்சரவையில மேலும் 19 பேர் வரை இடம்பெற வாய்ப்புள்ளது. அதாவது பிரதமர் மோடி அமைச்சரவை எண்ணிக்கை மொத்தம் 79 ஆக அதிகரிக்க உள்ளதாம்.

யார் யாருக்கு வாய்ப்பு?
காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய ஜோதிராதித்யா சிந்தியா, பீகாரில் பாஜகவுக்கு பி டீமாக செயல்பட்டு ஜேடியூவுக்கு பின்னடைவை கொடுத்த சிராக் பாஸ்வான், அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால், பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடி, பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா, அப்னா தள் தலைவர் அனுபிரியா பட்டேல் ஆகியோர் இடம்பெற வாய்ப்புண்டு. இந்த பட்டியலில் அதிமுகவுக்கு இடம் கிடைக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

அதிமுகவின் எதிர்பார்ப்பு
அதிமுகவின் லோக்சபா எம்.பி ரவீந்திரநாத் குமார், ராஜ்யசபா எம்.பி. தம்பிதுரை உள்ளிட்டோர் அமைச்சரவை மாற்றத்தில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நீண்டகாலமாக எதிர்பார்ப்பில் உள்ளனர். அமைச்சரவை மாற்றத்தின் போது ஜேடியூவுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications