இதல்லவோ தொண்டுள்ளம்... கொரோனா வார்டில் பணியமர்த்தக் கோரும் செவிலியர்
டெல்லி: கொரோனா என்ற வார்த்தையை கேட்டாலே அலர்ஜியாகவும், அச்சத்துடனும் பார்ப்பவர்களுக்கு மத்தியில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தன்னை பணியமர்த்துமாறு கோரியுள்ளார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆன் செவிலியர் ஒருவர்.
கனிஷ்க் யாதவ் என்ற ஆண் செவிலியர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அவசர கால சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மருத்துவ கண்காணிப்பாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அவசர கால சிகிச்சை பிரிவில் தாம் பணியாற்றி அனுபவம் பெற்றிருப்பதாகவும், எந்த ஒரு அசாதார சூழலையும் எதிர்கொள்ளும் திறன் தன்னிடம் உள்ளதாகவும்குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மன அழுத்தத்தில் இருப்பதால், அவர்களுக்கு உரிய கவுன்சிலிங்கும் தன்னால் கொடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

தன்னை கொரோனா சிகிச்சை வார்டுக்கு மாற்றி பணியமர்த்த வேண்டும் என்றும், அதற்கான அனுமதியை தர வேண்டும் எனவும் தனது கடிதத்தில் கூறியுள்ளார் கனிஷ்க் யாதவ். உலகமே கொரோனாவை கண்டு ஓடி மறையும் நிலையில், கொரோனாவையே விரட்டும் வீரனாக இவர் திகழ்கிறார் என சமூக வலைதளங்கில் இவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. மேலும், உண்மையான ரியல் ஹீரோ கனிஷ்க் யாதவ் தான் என்று அவரை பலரும் பாராட்டியுள்ளனர்.
இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையிலும், அதனை பொருட்படுத்தாது தொண்டுள்ளதோடு இந்த பணியை செய்ய கனிஷ்க் யாதவ் முன் வந்திருப்பது அவரின் மனித நேயத்தை உலகிற்கு பறைசாட்டுகிறது. பாசிட்டிவ் எனர்ஜியோடு தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு கனிஷ்க் யாதவ் எழுதிய கடிதத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கண்காணிப்பாளர் இன்னும் எந்த பதிலும் அனுப்பவில்லை எனத் தெரிகிறது.

இதனிடையே இவரைப் போலவே கொரோனா நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications