அதிவேகமாக பரவும் கருப்பு பூஞ்சை நோய்.. சர்க்கரை நோயாளிகள் ஜாக்கிரதை.. எய்ம்ஸ் மருத்துவர் எச்சரிக்கை
டெல்லி: கொரோனா நோயாளிகளை அதிகம் தாக்கும் Mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை வேகமாகப் பரவிவருவதால் நீரிழிவு நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எய்ம்ஸ் மருத்துவர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலின் 2ஆம் அலை நாட்டில் தற்போதுதான் மெல்லக் குறைந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், நாட்டிலுள்ள சில மாநிலங்களில் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கருப்பு பூஞ்சை பாதிப்பை ராஜஸ்தான் பெருந்தொற்றாக் அறிவித்துள்ளது
இந்நிலையில் இந்த நோய் பற்றி எய்ம்ஸ் மருத்துவர் பேராசிரியர் எம்.வி.பத்ம ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "எய்ம்ஸ் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கை தொட்டுள்ளது. தினசரி குறைந்தது 20 கருப்பு பூஞ்சை நோயாளிகள் இங்கு வருகின்றனர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இவை கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களை அதிகம் குறி வைத்துத் தாக்குகிறது. கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையின் போது அளிக்கப்படும் ஸ்ட்ரீயாடு மருந்துகள் மருந்துகள் காரணமாக அவர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகிறது. இதனால் அவர்களுக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு எளிதாக ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் மிக எளிதாகப் பாதிக்கப்படலாம். எனவே, அவர்கள் தங்கள் சர்க்கரை அளவை மிகத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.