"இழப்பீடு கிடைக்காது.." உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரஷர் கொடுத்த ஏர் இந்தியா? பரபர புகார்
டெல்லி: ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டை அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இருப்பினும், இழப்பீடு வழங்கும் பிராசஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஏர் இந்தியா தரப்பு அழுத்தம் கொடுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது
கடந்த ஜூன் 12-ம் தேதி நடந்த ஏர் இந்தியா விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட விமானத்தில் இருந்த 241 பேரும், தரையில் இருந்த 19 பேரும் உயிரிழந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும். இந்த விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஏர் இந்தியா நிவாரணத் தொகையை அறிவித்திருந்தது.

இடைக்கால நிவாரணம்
முதற்கட்டமாக ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணமாக அளிப்போம் என்றும் கூறியிருந்தனர். இருப்பினும், இழப்பீடு வழங்கும் நடைமுறையில் ஏர் இந்தியா தேவையில்லாத கேள்விகளைக் கேட்டிருப்பதாகவும் அதை நிரப்பித் தருமாறு குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனர். இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்ட உயிரிழந்த குடும்பத்தினருக்குச் சட்டரீதியான உதவிகளைச் செய்து வரும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீவர்ட்ஸ் சட்ட நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.
அழுத்தம் கொடுப்பதாகப் புகார்
இடைக்கால இழப்பீட்டை வழங்குவதற்கு முன்பே, நிதி விவரங்களைச் சமர்ப்பிக்கக் கூறி குடும்பத்தினரை ஏர் இந்தியா தரப்பு வற்புறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஏர் இந்தியா, போயிங் உள்ளிட்ட விபத்திற்குக் காரணமானவர்களிடம் இருந்து கிளைம் பெற ஸ்டீவர்ட்ஸ் நிறுவனம் பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் ஸ்டீவர்ட்ஸ் இதுபோல குற்றஞ்சாட்டியுள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது.
எதிராக பயன்படுத்தப்படலாம்
எந்தவொரு விளக்கமும் இல்லாமல் சட்ட விதிமுறைகளை உள்ளடக்கிய விரிவான கேள்விகளைக் கொண்ட விண்ணப்பத்தை ஏர் இந்தியா அளித்துள்ளதாக ஸ்டீவர்ட்ஸ் நிறுவனத்தின் பீட்டர் நீனன் விமர்சித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "அந்த விண்ணப்பத்தை எங்களுக்குக் காட்டினர். அதில் சட்டப்பூர்வமான வரையறைகளைக் கொண்ட சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
சட்டரீதியாக முக்கியமான பல தகவல்களைக் கேட்கிறார்கள்.. ஆனால் ஏன் இந்தத் தகவல்களைக் கேட்கிறோம் என்பதை விளக்கவில்லை. இந்த தகவல்களே பின்னர் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம். இந்தச் செயலுக்கு வெட்கப்பட வேண்டும்" என்றார்.
இழப்பீடு கிடைக்காது
முறையான சட்ட வழிகாட்டுதல் இல்லாமல் இந்த விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுக்கச் சொல்லியிருப்பதாகவும் அந்த வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். ஒருவளை நிரப்பித் தரவில்லை என்றால் பணம் முழுமையாகக் கிடைக்காமல் போகலாம் என்றும் கூறப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக அந்தப் படிவத்தில்.. விபத்தில் இறந்தவர் பொருளாதார ரீதியாக யாரையாவது சார்ந்திருந்தாரா என்று கேட்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வைத்து இழப்பீடு தொகையைக் கடுமையாகக் குறைக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளனர்.
ஏர் இந்தியா விளக்கம்
அதேநேரம் இந்தக் குற்றச்சாட்டை ஏர் இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இடைக்கால நிவாரணத்தை எவ்வளவு தரலாம்.. எப்படித் தரலாம் என்பது குறித்து ஆய்வு செய்யவே இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான நேரத்தைக் கொடுக்கவும் அவர்களுக்குத் தேவையான ஆதரவைத் தரவும் ரெடியாகவே இருப்பதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.
மேலும், படிவங்களை நேரில் அல்லது மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம் என்றும் குடும்பத்தினர் அழைக்காமல் ஏர் இந்தியா தரப்பு யாருடைய வீட்டிற்கும் செல்லவில்லை என்பதை விமான நிறுவனம் தெளிவுபடுத்தியது. இது மட்டுமின்றி 47 குடும்பங்களுக்கு ஏற்கனவே இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் மேலும் 55 குடும்பங்களின் ஆவணங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் தொகை போக டாடா குழுமம் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும், நீண்ட கால உதவி வழங்குவதை உறுதி செய்ய ரூ.500 கோடிக்குத் தனியாக அறக்கட்டளை அமைக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்திருந்தது.












Click it and Unblock the Notifications