சிக்கலில் ஏர் இந்தியா.. வாஷிங்டனுக்கு விமானத்தை இயக்கவில்லையாம்! காரணத்தை பாருங்க
டெல்லி: ஏர் இந்தியா விமானங்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றன. இந்நிலையில், டெல்லியிலிருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு இதற்கு முன்னர் விமானங்களை இந்நிறுவனம் இயக்கி வந்த நிலையில், செப்டம்பர் மாதம் முதல் இந்த சேவையை ரத்து செய்கிறோம் என்று அறிவித்திருக்கிறது.
ஏர் இந்தியா நிறுவனம் செப்டம்பர் மாதம் முதல் டெல்லி மற்றும் வாஷிங்டன் டி.சி. இடையேயான தனது விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. போயிங் ரக விமானங்களின் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக விமானப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இரண்டு நிறுவனங்களின் விமானங்கள் இருக்கின்றன. ஒன்று ஏர்பஸ், இன்னொன்று போயிங். ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனம் போயிங் விமானங்களைதான் பயன்படுத்தி வருகிறது. போயிங் விமானங்களின் பழுதுபார்ப்பு மற்றும் பாகங்கள் புதுப்பித்தல் பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக விமானங்களின் பயன்பாடு குறைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டு இறுதி வரை விமானங்கள் விமானங்கள் பற்றாக்குறை இருக்கும் என ஏர் இந்தியா மதிப்பிட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மூடியுள்ளதும் ஏர் இந்தியாவின் சர்வதேச வழித்தடங்களை பாதித்துள்ளது. இந்த இரு காரணங்களாலும் டெல்லி-வாஷிங்டன் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஏர் இந்தியா மட்டுமே வாஷிங்டன்னுக்கு விமான சேவையை வழங்கி வந்தது. இப்போது இதுவும் தனது சேவையை நிறுத்தியிருக்கிறது. எனவே டெல்லியிலிருந்து வாஷிங்டன் செல்ல விரும்பும் பயணிகள் யுனைடெட் ஏர்லைன்ஸ், ஏர் பிரான்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுஃப்தான்சா போன்ற விமான நிறுவனங்களை நாட தொடங்கியுள்ளனர்.
ஏர் இந்தியா, தனது போயிங் 787-8 ரக விமானங்களில் 26 விமானங்களில் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. இந்த பணிகள் 2026 ஆம் ஆண்டு இறுதி வரை விமானங்களின் பயன்பாட்டை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்த போக்குவரத்து ரத்து, முதன்மையாக ஏர் இந்தியாவின் விமான எண்ணிக்கையில் திட்டமிடப்பட்ட பற்றாக்குறையால் ஏற்பட்டது" என்று ஏர் இந்தியா வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. "இது, பாகிஸ்தான் வான்வெளி தொடர்ந்து மூடப்பட்டிருப்பதுடன், விமான நிறுவனத்தின் நீண்ட தூர சேவைகளை பாதிக்கிறது" என்றும் கூறியிருந்தது.
பாகிஸ்தானின் வான்வெளி தடை காரணமாக ஏர் இந்தியாவுக்கு 12 மாதங்களில் 600 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications