காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் நவ.30 வரை பட்டாசு வெடிக்கத் தடை - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தேசிய பசுமைப்தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் வரும் 30 ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் இன்று நள்ளிரவு முதல் வரும் 30ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதித்து தேசிய பசுமைப்தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தமிழகம், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 23 மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பது தொடர்பான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் காற்று மாசு உள்ள 122 நகரங்களில் 2 மணி நேரம் மட்டுமே பசுமைப்பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் காற்றுமாசு காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனை, வெடிக்க தடை விதிக்கக் கோரி பல்வேறு மனுக்கள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ஏற்கனவே பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டை தடை செய்துள்ளன.
இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் ஆந்திரா, அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேகாலயா, தமிழ்நாடு உள்ளிட்ட 23 மாநிலங்களில் உள்ள 122 நகரங்களில் காற்றின் தரம் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த பசுமைத் தீர்ப்பாயம், ஆந்திரா, அஸ்ஸாம், பீகார், சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு அன் காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 18 மாநில தலைமைச் செயலர்களும் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பிருந்தது.
காற்று மாசினைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்களும் எழுத்துப் பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்தநிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதி ஏகே கோயல் தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு இன்று வழங்கினர்.
அதில், டெல்லி மற்றும் ஒடிசா மாநிலத்தில் இன்று நள்ளிரவு முதல் 30ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்கவும் விற்பனை செய்யவும் பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் காற்று மாசு உள்ள 122 நகரங்களில் 2 மணி நேரம் பசுமைப்பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு தமிழகத்தில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்களையும் தொழிலாளர்களையும் கவலையடையச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications