ஏர்செல் மேக்சிஸ் வழக்கு- ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் டிச.20ல் ஆஜராக டெல்லி நீதிமன்றம் சம்மன்
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ப.சிதம்பரம், அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் டிசம்பர் 20-ந் தேதி ஆஜராக டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Weather Report: கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க.. சென்னை ரெய்ன்ஸ் சொன்ன குட் நியூஸ்- இனி என்ன நடக்கும்?
மத்திய நிதி அமைச்சராக 2006-ல் ப.சிதம்பரம் பதவியில் இருந்தார். அப்போது மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனமானது ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது. ஏர்செல் நிறுவனத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ரூ3,650 கோடி முதலீடு செய்தது.
முறைகேடாக அனுமதி என வழக்கு
ஆனால் மத்திய நிதி அமைச்சரால் ரூ600 கோடி ரூபாய் வரையிலான அன்னிய முதலீடுகளுக்குதான் அனுமதி தர முடியாது. அதற்கு மேலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுதான் அனுமதி தர வேண்டும். இருந்தபோதும் ப.சிதம்பரம் விதிமுறைகளை மீறி ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய முறைகேடாக அனுமதி கொடுத்தார் என்கிறது சிபிஐ குற்றப்பத்திரிகை.
கார்த்தி சிதம்பரம் நிறுவனம் ஆதாயம்
இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் உதவினார் என்கிறது அக்குற்றப்பத்திரிகை. அதாவது இந்த முறைகேடான முதலீடு அனுமதிக்காக கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் லஞ்சம் பெற்றதாகவும் சிபிஐ, அமலாக்கப் பிரிவு சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் இதில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டெல்லி சிறப்பு நீதிமன்றம்
இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 22-ந் தேதி நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, அமலாக்கத்துறை சார்பில் என்.கே.மட்டா, சி.பி.ஐ. சார்பில் நூர் ராம்பால் ஆகியோர் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
டிச.20-ல் ஆஜராக சம்மன்
இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக புதிய ஆதாரங்களை சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் அடுத்த கட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ, அமலாக்கப் பிரிவு சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், நீதிபதி நாக்பாலிடம் தெரிவித்தார். இந்த வாதத்தின் அடிப்படையில் சிபிஐ, அமலாக்கப்பிரிவின் குற்றப்பத்திரிகைகளை ஏற்றுக் கொண்ட டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி நாக்பால், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் டிசம்பர் 20-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்டார்.