சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் சிக்குகிறார் அகிலேஷ் யாதவ்?
டெல்லி: சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் அகிலேஷ் யாதவ் கண்காணிப்பு வளையத்திற்கு சிக்குவார் என சிபிஐயின் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதியின் ஆட்சி காலத்தில் 2012-2016-ஆம் ஆண்டு வரை சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. அதில் சமாஜ்வாதியின் கட்சியின் முதல்வராகவும் சுரங்கத் துறை அமைச்சராகவும் இருந்த அகிலேஷ் யாதவ், அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவின்படி விசாரணை வளையத்தில் சிக்குவார் என சிபிஐ கூறியுள்ளது.

அதுபோல் 2008-ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்த பி சந்திரகலா ஹமீர்பூர் மாவட்ட ஆட்சியராக கடந்த 2012- 14-ஆம் ஆண்டு பணியாற்றினார். அப்போது ஈ டென்டர் முறையில் சுரங்க ஒப்பந்தம் ஒதுக்கீட்டு முறையை மீறி ஒதுக்கீடுகள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சந்திரகலா உள்பட 10 நபர்கள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இவர்களுள் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் சஞ்சய் தீக்ஷித், சமாஜ்வாதி கட்சியின் சட்டசபை கவுன்சில் உறுப்பினர் ரமேஷ் குமார் உள்ளிட்டோரும் அடங்குவர்.
ஐஏஎஸ் அதிகாரி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர்களின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. எனவே அகிலேஷ் யாதவும் விரைவில் விசாரணை வளையத்துக்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications