லோக்சபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அகிலேஷ் யாதவ்! திட்டமே வேறு.. விட்டதை பிடிக்க குறி
டெல்லி: உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் வென்றுள்ள நிலையில், அகிலேஷ் யாதவ் தனது மக்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு, பாஜக அமைச்சர்கள் உட்பட பல எம்எல்ஏக்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.
இதனால் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. உத்தரப் பிரதேசம் முழுவதும் அகிலேஷ் யாதவ் சூறாவளி பிரசாரமும் மேற்கொண்டார்.

இருப்பினும், இந்தத் தேர்தலில் மீண்டும் பாஜகவே வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. பாஜக 255 இடங்களில் வென்ற நிலையில், சமாஜ்வாதி கட்சியால் 111 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
இதையடுத்து யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து 2ஆவது முறையாக அங்கு ஆட்சி அமைத்தார். இந்தத் தேர்தலில் அகிலேஷ் யாதவ் கர்ஹாலில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இந்தச் சூழலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தனது மக்களவை தொகுதியில் இருந்து இன்று ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த முறை சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு அவர் பெரியளவில் உபி அரசியல் களத்தில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். ஏனென்றால், கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் அசம்கர் தொகுதியில் இருந்து அகிலேஷ் யாதவ் எம்.பி.யாக இருந்தார்
தேர்தலுக்கு சில காலம் முன்பு தான் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் உத்தரப் பிரதேசத்தில் நேரடியாக யோகியை எதிர்த்து அரசியல் செய்யவே அகிலேஷ் யாதவ் இப்போது தனது மக்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வரும் 2027இல் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகும் வகையிலேயே அவர் திட்டமிட்டு வருவதாகவும் அதற்காகவே அவர் தனது மக்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications