எதிர்மறை சிந்தனையுடன் அமைக்கப்படும் கூட்டணி வெற்றி பெறாது.. என்டிஏ கூட்டத்தில் பிரதமர் மோடி அட்டாக்
டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மறைமுகமாக விமர்சித்தும் பேசினார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்கட்சிகள் முழு வீச்சில் தேர்தலுக்கு தயராகி வரும் நிலையில், பாஜகவும் வரும் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு வியூகங்களை வகுக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டணி நடத்தும் அதே நாளில் போட்டிக் கூட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது.

அதன்படி, இன்று நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்த பாஜக அழைப்பு விடுத்தது. அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று இந்த கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- என்.டி.ஏ கூட்டணிக்கு தேசம்தான் முக்கியம். தேசத்தின் பாதுகாப்பு முக்கியம்.
ஸ்திரதன்மையுடன் நடைபெறும் ஆட்சியே இந்தியா மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை பிறக்க காரணம். எதிர்மறையுடனான சிந்தனையுடன் அமைக்கப்படும் கூட்டணி ஒருபோது வெற்றி பெறாது. NDA வில் N - புதிய இந்தியா, D- நாட்டின் வளர்ச்சி, A- மக்கள் மற்றும் பிராந்தியத்தின் விருப்பம். வளர்ச்சியும் மக்களுக்கு அதிகாரமளிப்பதுதான் என்.டி.ஏ கூட்டணிக்கு முக்கியம்.

கூட்டணியின் மூன்றாவது ஆட்சியில் இந்தியா மூன்றாவது மிகப்பெரும் பொருளாதார நாடாக மாறும். எதிர்க்கட்சிகள் தங்கள் நலனுக்காக நெருக்கம் காட்டுகிறார்கள். ஆனால், அவர்களால் ஒருங்கிணைந்து வர முடியாது. 2024 தேர்தலுக்கு வெகு தூரம் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மற்றொரு வாய்ப்பை அளிக்கும் மனநிலைக்கு மக்கள் வர வேண்டும். அரசியலில் போட்டி இருக்கலாம். ஆனால் பகைமை இருக்கக் கூடாது.
ஆனால், எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றன. அரசியல் நலனை தாண்டி இந்தியாவை மேலாக வைத்துள்ளோம். பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா வழங்கியது தேசிய ஜனநாயக கூட்டணிதான். பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத தலைவர்களான சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கியிருக்கிறோம். அரசியல் நலனை தாண்டி இந்தியாவை மேலோங்கி வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications