அலோபதி நச்சு மருந்து.. ஆண்டுதோறும் மில்லியன் உயிரிழப்பு.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பாபா ராம்தேவ்
டெல்லி: அலோபதி நச்சு மருந்துகளால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கனோர் உயிரிழந்து வருவதாக யோகா குரு பாபா ராம்தேவ் பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தனது தயாரிப்புகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்காக இதுபோன்று தவறான தகவல்களை வெளியிடுவதாக அவர் மீது ஏற்கனவே புகார்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது அலோபதி மருந்து குறித்து பேசியிருப்பது மீண்டும் பேசு பொருளாகி உள்ளது.
பதஞ்சலி என்ற பெயரில் பாபா ராம்தேவ் தனது தயாரிப்புகளை மார்க்கெட்டில் கொண்டுபோய் சேர்ப்பதற்காகவும், பொதுமக்களைக் கவர்வதற்காகவும் தவறான விளம்பரங்களை வெளியிடுவதாக தொடர்ந்து அவர் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பதஞ்சலி விளம்பரங்களைத் தடை செய்யக் கோரி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உச்ச நீதிமனத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டிருந்தார்.

செய்தித்தாள்கள் மற்றும் விளம்பரங்களை வெளியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, சின்ன சின்ன விளம்பரங்கள் மூலம் பதஞ்சலி நிறுவனத்தினர் மன்னிப்பு கோரியிருந்தனர். இதையடுத்து, இனி தவறு நடக்காது என்று உத்தரவாதம் அளித்ததையடுத்து உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 13 ம் தேதி வழக்கை முடித்துவைத்தது. இந்நிலையில், தற்போது அலோபதி மருந்துகளால் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுத்துவதாக பாபா ராம்தேவ் பேசியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம்தேவ், நோய்களை நீக்கும் ஆயுர்வேத மருந்துகள் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. அலோபதியின் நச்சு மருந்துகளால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆனாலும், ஆயுர்வேத மருத்துவத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறாமலேயே உள்ளது. நமக்குத் தெரிந்த வரலாற்றின்படி, உலகம் முழுவதும் தங்களது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்பதற்காக பத்து கோடி மக்களை ஆங்கிலேயர்கள் கொலை செய்துள்ளனர்.
இஸ்லாம் மதத்தின் பெயரால் மில்லியன் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டு குவிக்கப்பட்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், மார்க்ஸ், லெனின், மாவோ ஆகியோரின் புரட்சியிலும் ஏராளமானோர் கொலை செய்யப்படடுள்ளனர். தற்போது, ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மக்கள் நச்சு செயற்கை மருந்துகளை சாப்பிட்டு உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். மருத்துவ சுதந்திரத்திற்கான இயக்கமாக பதஞ்சலி உள்ளது. எனவே, உள்நாட்டு மருத்துவத்துக்கான போராட்டத்தில் எங்களது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்துவோம்" என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே தவறான தகவல்களை வெளியிடுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டிருந்தார். வழக்கு முடிந்து ஒருவாரத்துக்குள் அலோபதி மருந்து குறித்து மீண்டும் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications