அம்பேத்கரின் கனவை டெல்லியில் நிறைவேற்றியுள்ளேன் - பெருமிதப்படும் அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லி: 75 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பேத்கரின் கனவுகள் டெல்லியில் நனவாகி வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 240 அரசுப் பள்ளிகளில் 12,430 புதிய ஸ்மார்ட் வகுப்புகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தார்.
பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் எதிர்கட்சிகள் டெல்லி முதல்வரை தீவிரவாதி என்று அழைத்தனர். என்னை தீவிரவாதி என்று சொல்வது சிரிப்பாக இருக்கிறது. இந்த தீவிரவாதி பள்ளிகள் கட்டிவருகிறார் என்றார் கெஜ்ரிவால்.

கெஜ்ரிவால்
இந்நிலையில் இன்று 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்மார்ட் வகுப்புகளை கெஜ்ரிவால் திறந்துவைத்து பேசும்போது, '' ஒவ்வொரு மாணவருக்கும் சிறந்த கல்வியைக் கொடுக்க வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் கனவுகண்டார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், மற்ற மாநிலங்களில் அவரது கனவு நனவாகவில்லை.

அம்பேத்கர் கனவு
அம்பேத்கர் கண்ட கனவு டெல்லியில் நிறைவேறி இருக்கிறது. இதையறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். டெல்லி அரசு கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 20,000 வகுப்பறைகளை கட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து கூட 20,000 வகுப்பறைகளை கட்ட முடியவில்லை. தலைவர்கள் பள்ளிகளைத் தவிர எதற்கும் பயப்படுவதில்லை. நல்ல பள்ளிகள் கட்டினால் ஜாதி, மதத்தின் பெயரால் தலைவர்களுக்கு ஓட்டு கிடைக்காது.

பள்ளிகள்
இந்த பள்ளிகள் உறுதியான தேசபக்தர்களை உருவாக்கும். நாங்கள் பள்ளிகளை கட்டவில்லை, தேசபக்தர்களை உருவாக்க தொழிற்சாலைகளை அமைக்கிறோம். கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பெரிய தலைவர்கள், கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி என்று கூறி வருவது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. பயங்கரவாதி என்று சொல்லும் நபர் இன்று 12,430 வகுப்பறைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்'' என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.

பஞ்சாப் தேர்தல்
கெஜ்ரிவால் காலிஸ்தான் நாட்டு பிரதமராக ஆசைப்படுகிறார் என பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து கெஜ்ரிவால் மீது சர்ச்சைகள் சுற்றிவந்தன. அதற்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலடி கொடுத்தார் கெஜ்ரிவால். தற்போது டெல்லியில் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறையைத் தொடங்கி வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications