டிரம்ப் அழுத்தத்தால் அமெரிக்காவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா?
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வரி விதிப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா அதிகமாக வாங்க தொடங்கி உள்ளது. இதனால் டிரம்பின் வரி விதிப்புக்கு இந்தியா பணிந்ததா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இந்தியா - அமெரிக்கா இடையேயான கச்சா எண்ணெய் வர்த்தகம் பற்றிய டேட்டா வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஏற்றுமதி பெரிய அளவில் சரிவை எதிர் நோக்கி உள்ளது. டிரம்ப் நம் நாட்டுக்கு வரி விதித்தன் பின்னணியில் 2 முக்கிய விஷயம் உள்ளதாக டிரம்பே தெரிவித்துள்ளார்.

அதில் ஒன்று ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது. உக்ரைன் மீது ரஷ்யா தற்போது போர் புரிந்து வருகிறது. இப்படியான சூழலில் ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி அதன்மூலம் போருக்கு உதவி செய்கிறது என்று டிரம்ப் கூறினார்.
வர்த்தக பற்றாக்குறை
இதில் 2வது விஷயம் அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக பற்றாக்குறை. அமெரிக்காவும், நாமும் மாறி மாறி வர்த்தகம் செய்து வருகிறோம். இதில் அமெரிக்காவை விட நாம் தான் அதிகம் வர்த்தகம் செய்கிறோம்.
இதனை டிரம்பால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இதனால் தான் ரஷ்யாவுக்கு பதில் அமெரிக்காவிடம் ராணுவ தளவாடங்கள் வாங்க வேண்டும். கச்சா எண்ணெய் வாங்க வேண்டும். இதன் வழியாக நம் நாட்டுடனான வர்த்தக பற்றாக்குறையை சரிசெய்ய டிரம்ப் நினைத்தார். ஆனால் நம் நாடு பிடி கொடுக்கவில்லை. இதனால் தான் நம் நாட்டின் மீது டிரம்ப் 50 சதவீத வரிகளை விதித்துள்ளார்.
மிரட்டும் டிரம்ப்
மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரித்தால் பொருளாதார தடை, 2ம் நிலை தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டி வருகிறார். இருப்பினும் மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை.
இதற்கிடையே தான் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை மத்திய அரசு குறைத்துள்ளதாகவும், அதனை வரவேற்பதாகவும் டிரம்ப் கூறினார். ஆனால் அதனை மத்திய அரசு மறுத்தது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்வதாக அறிவித்தது.
அமெரிக்காவிடம் அதிக கச்சா எண்ணெய்
இந்நிலையில் தான் தற்போது பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் நம் நாடு அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரித்துள்ளது. அதன்படி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் டெண்டர் மூலமாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு தேவையை கருத்தில் கொண்டு அமெரிக்காவின் யுஎஸ் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்டிடம் இருந்து 5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வாங்கி உள்ளது.
மேலும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் 2 மில்லியன் பேரல்களும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2 மில்லியன் பேரல்களையும் அதே அமெரிக்க நிறுவனமான யுஎஸ் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்டிடம் இருந்து வாங்கி உள்ளது. இதன்மூலம் அமெரிக்காவிடம் இருந்து நாம் வாங்கும் கச்சா எண்ணெயின் அளவு மளமளவென அதிகரித்துள்ளது.
எவ்வளவு அதிகம்?
அதாவது இந்த ஆண்டு தொடக்கத்தில் நாம் அமெரிக்காவிடம் இருந்து நம் நாட்டின் தேவையில் 3 சதவீதம் மட்டுமே கச்சா எண்ணெயை வாங்கினோம். இது கடந்த ஜூலை மாதம் 8 சதவீதமாக அதிகரித்தது. மேலும் இந்த ஆண்டு முதல் பாதியில் அமெரிக்காவிடம் இருந்து நம் நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 34 ஆயிரம் பேரல்கள் கச்சா எண்ணெய் வந்தது.
தற்போது அது நாள் ஒன்றுக்கு 3 லட்சத்து 38 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவு 51 சதவீதம் வரை அதிகரித்து 2026ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 3.7 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
ரஷ்யா நிலை என்ன?
வரி விதிப்புக்கு இடையே கச்சா எண்ணெய் மீதான போட்டி விலை மற்றும் அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கூட நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை.
நம் நாட்டுக்கான தேவையில் 36 சதவீதத்தை ரஷ்யாவிடம் இருந்து தான் நாம் வாங்கி வருகிறோம். இருப்பினும் கூட அமெரிக்காவிடம் இருந்து திடீரென்று கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரித்து இருப்பது டிரம்பின் வரி விதிப்புக்கு மத்திய அரசு பணிந்ததா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications