முதல் விக்கெட்.. பாஜகவில் இணைந்த டெல்லி ஆம்ஆத்மி கவுன்சிலர்! அடி-உதைக்கு நடுவே ஹாயாக கட்சி தாவினார்
டெல்லி மாநகராட்சியில் மேயர் பதவியை ஆம்ஆத்மி கைப்பற்றிய நிலையில் அக்கட்சிக்கும், பாஜக கவுன்சிலர்களுக்கும் இடையே அடி-உதை என கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றதை தொடர்ந்து அக்கட்சியினருக்கும், ஆம்ஆத்மி கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருகட்சியினரும் சபையின் மையப்பகுதியில் ஒருவரையொருவர் அடித்து, உதைத்து தாக்கிக்கொண்ட நிலையில் மோதலுக்கு நடுவேயும் கூட ஹாயாக ஆம்ஆத்மி கவுன்சிலர் பாஜகவுக்கு தாவியுள்ளார். பாஜக குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த கட்சி தாவல் நடவடிக்கையை ஆம்ஆத்மிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இங்கு அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்றால் 126 வார்டு கவுன்சிலர்களின் ஆதரவு வேண்டும். இந்த மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 4ல் தேர்தல் நடந்தது. டிசம்பர் 7 ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 134 வார்டுகளில் அந்த கட்சி வெற்றி பெற்றது. பாஜக 104 வார்டுகளிலும், காங்கிரஸ் 9 வார்டுகளிலும், மற்றவர்கள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இந்த வெற்றி ஆம்ஆத்மிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

பாஜகவுக்கு முற்றுப்புள்ளி
டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கும் நிலையில் மாநகராட்சியும் தற்போது அக்கட்சியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. மேலும், கடந்த 2007 முதல் 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட டெல்லி மாநகராட்சியின் அதிகாரத்தை ஆம்ஆத்மி கட்சி தட்டிப்பறித்துள்ளது. ஆம்ஆத்மி, பாஜக இடையேயான மோதல் காரணமாக மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

ஆம்ஆத்மியில் மேயர்
இறுதியாக 2 நாட்களுக்கு முன்பு மேயர் தேர்தல் நடந்தது. ஆம்ஆத்மி சார்பில் ஷெல்லி ஓபராய், பாஜக சார்பில் ரேகா குப்தா ஆகியோர் மேயர் வேட்பாளராக களமிறங்கினர். இதில் ஆம்ஆத்மி சார்பில் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றார். இதையடுத்து தொடர்ந்து டெல்லி மாநகராட்சியில் களேபரம் நடந்து வருகிது. பாஜக, ஆம்ஆத்மியினர் தொடர்ந்து மோதி வருகின்றனர். முறைகேடு செய்து ஆம்ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. மேயர் பதவியை கைப்பற்ற பாஜக கவுன்சிலர்களிடம் குதிரைபேரம் செய்தது என பல்வேறு குற்றச்சாட்டுகளை தாமரை கட்சி தெரிவித்துள்ளது.

அடி-உதை
இதையடுத்து நிலைக்குழு தலைவர்கள், உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணி துவங்கியது. இதிலும் இருகட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருகட்சியின் கவுன்சிலர்களும் சபையில் மையப்பகுதியில் ஒருவைரையொருவர் அடித்தும், உதைத்தும் தாக்கி கொள்கின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். ஆம்ஆத்மி கட்சியினர் போலீசாரையும், பாஜகவினர் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர்.

கட்சி மாறிய கவுன்சிலர்
இதற்கிடையே தான் களேபரங்களுக்கு மத்தியில் ஆம்ஆத்மி கட்சியின் கவுன்சிலர் பவன் செராவத் பாஜகவில் இணைந்தார். பவானா வார்டு கவுன்சிலரான இவர் நிலைக்குழு தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார். டெல்லி மாநகராட்சி தேர்தலில் பிரச்சனையை உருவாக்க தன்னை ஆம்ஆத்மி கட்டாயப்படுத்தியதால் பாஜகவில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆம்ஆத்மிக்கு அதிர்ச்சி
டெல்லி மாநகராட்சியில் நியமன உறுப்பினர்கள் வாயிலாக அதிகாரத்தை கைப்பற்ற பாஜக முடிவு செய்தது. ஆனால் அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தான் தற்போது ஆம்ஆத்மி கட்சி மேயர் பதவியை பெற்றுள்ளது. இதற்கிடையே தான் தற்போது ஆம்ஆத்மி கவுன்சிலர் பாஜகவுக்கு கட்சி தாவியுள்ளார். பாஜக குதிரைபேர அரசியலில் ஈடுபடும் என குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் இந்த நடவடிக்கை என்பது ஆம்ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கவுன்சிலர்கள் பாஜகவில் இணையாமல் தடுக்கும் பணியை ஆம்ஆத்மி கட்சி துவங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications