விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம்
சென்னை: ''தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. விஜய் கூட்டணிக்கு வந்தால் எங்களின் வாக்கு வங்கியில் எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம். இதனால் தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சி செய்யவில்லை'' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தவெகவை அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு பாஜக இழுக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் பரவின. இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அதிமுக தலைமையிலான கூட்டணியில் விஜயின் தவெக சேரவில்லை.

இப்போது தவெக தனித்து களம் இறங்குகிறது. இந்நிலையில் தான் டெல்லியில் 'டைம்ஸ் நவ் சுமிட் 2026' நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
தவெகவுடன் கூட்டணி பேசவில்லை
இந்த வேளையில் ''தமிழகத்தில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கவனம் பெற்று வருகிறது. அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கப்பட்டதா?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அமித்ஷா, ''நாங்கள் எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. இந்த கூட்டணிக்கு நாங்கள் முயற்சி செய்யவில்லை.
ஏனென்றால் அவர் கூட்டணிக்கு வந்தால் எங்களின் வாக்கு வங்கியில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம்'' என்றார். இதன்மூலம் விஜய் கூட்டணிக்கு வந்தாலும் எந்த பயனும் இல்லை என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தனித்து களமிறங்கும் விஜய்
கடந்த வாரம் வரை தமிழகத்தில் அதிமுக - பாஜக கட்சிகள் விஜயை கூட்டணிக்குள் இழுக்க முயற்சி செய்வதாகவும், பாஜக சார்பில் விஜயின் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தொடர்ந்து மறுத்து வந்தனர். அதேபோல் தவெகவும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. தனித்து களமிறங்குவதாக அறிவித்தது.
நாளை வேட்பாளர்கள் அறிவிப்பு
இதையடுத்து தான் அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. முன்னதாக காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்க முயன்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது சாத்தியப்படவில்லை. இதனால் தற்போது தவெக தனித்து களம் காண்கிறது. நாளை சென்னையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
4 முனை போட்டி
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது. தமிழகத்தை எடுத்து கொண்டால் தற்போது நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இதில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜயின் தவெக, சீமானின் நாம் தமிழர் இடையே போட்டி உள்ளது. அதேபோல் சசிகலா - ராமதாஸ் ஆகியோரும் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. இப்படி போட்டி இருந்தாலும் கூட ஆட்சியை யார் பிடிப்பது? என்பதில் தற்போது திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது.















Click it and Unblock the Notifications