5 மணிக்கு மேல் கேட்ட அந்த சத்தம்! டெல்லி இஸ்ரேல் தூதரகத்தில் குண்டு வெடித்ததா? துணை தூதர் ஷாக் தகவல்
டெல்லி: டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே இன்று மாலையில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது குறித்து அந்த தூதரகத்தின் துணை தூதர் ஓஹத் நாகேஷ் காய்னர் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.
டெல்லி சானக்கியாபுரி பகுதியில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் உள்ளது. இங்கு இஸ்ரேல் நாட்டு தூதர், அதிகாரிகள், பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று மாலை சுமார் 5.15 மணியளவில் இஸ்ரேல் தூதரகத்தின் பின்புறத்தில் காலியாக உள்ள இடத்தில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது.

இதையடுத்து இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிகுண்டு வெடித்ததாக டெல்லி போலீசாருக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி போலீசார், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மோப்பநாய் அந்த பகுதியில் முழுவதும் மோப்பம் பிடித்து ஓடியது. வெடிகுண்டு நிபுணர்கள் இஸ்ரேல் தூதரகம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வெடிகுண்டு வெடித்ததற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என முதற்கட்ட தகவல் வெளியானது.
டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே வெடித்த வெடிகுண்டு? போனில் வந்த தகவலால் பரபரப்பு.. கடைசியில் ட்விஸ்ட்
மேலும் அந்த இடத்தில் இஸ்ரேல் கொடியுடன் கிடந்த தட்டச்சு செய்யப்பட்ட கடிதத்தை போலீசார் கைப்பற்றி தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதில் காசா மீதான போருக்கு பழிவாங்க இந்த சம்பவத்தை நிகழ்த்தியதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது. இதையடுத்து இஸ்ரேல் தூதரகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு போனில் தகவல் தெரிவித்த நபரின் எண்ணை வைத்தும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே தான் இந்த சம்பவம் குறித்து இந்தியாவுக்கான இஸ்ரேலின் துணை தூதர் ஓஹத் நாகேஷ் காய்னர் கூறுகையில்,‛‛இன்று மாலை 5 மணிக்கு பிறகு இஸ்ரேல் தூதரகத்தின் அருகே வெடிச்சத்தம் கேட்டது. எங்களது தூதர அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களின் பாதுகாப்பு குழு டெல்லி போலீசாருடன் சேர்ந்து விசாரணை நடத்தி வருகிறது’’ என்றார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் என்பது போராக மாறி உள்ளது. காசாவுக்குள் இஸ்ரேல் நுழைந்து தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி குழுவினர் உள்பட சில நாடுகளிடம் இருந்து அச்சுறுத்தல் உள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications