"வீடியோவ பாருங்க! எவ்வளவு பெரிய தப்பு.. ஷின்சோ அபே உயிரிழக்க இதுதான் காரணம்!" ஆனந்த் மகேந்திரா பரபர
டெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக ஆனந்த் மகேந்திரா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நவீன ஜப்பான் வரலாற்றில் முக்கிய பிரதமர் என்ற சிறப்பை பெற்றவர் ஷின்சோ அபே. உடல்நலக் குறைவால் இவர் கடந்த 2020இல் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஜப்பான் நாட்டில் அதிக காலம் பிரதமர் பதவியில் இருந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது இடத்தில் வைத்துச் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

ஷின்சோ அபே
கடந்த சில நாட்களுக்கு முன்பு, நாரா என்ற பகுதியில் இருக்கும் ரயில் நிலையம் அருகே மக்களிடையே ஷின்சோ அபே பேசிக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென அவர் பின்னால் இருந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். அவரது உடலில் இருந்த ரத்தம் கொட்டியது. ஷின்சோ அபே உடனடியாக ஹெலிகாப்பட்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

படுகொலை
அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். அவருக்கு சுமார் 5 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஷின்சோ அபே சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். அவரது இதயத்தை ஒரு குண்டு துளைத்ததாகவும் இதுவே அவரது உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் ஜப்பானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒருவர் கைது
ஷின்சோ அபேவை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்ப முயன்ற 41 வயதான டெட்சுயா யமகாமி என்பவரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். நாரா பகுதியில் வசித்து வந்த யமகாமி, ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் முன்னாள் வீரர் ஆவர். ஷின் சோ அபே பிரதமராக இருந்த சமயத்தில், அவரது நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே அவரை கொலை செய்யத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனந்த் மகேந்திரா
ஜப்பான் போல துப்பாக்கிச் சட்டங்கள் மிகவும் கடுமையாக உள்ள நாட்டில் பொது இடத்தில் வைத்து தலைவர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சரியான முறையில் பாதுகாப்புப் படைகள் செயல்பட்டு இருந்தால் ஷின்சோ அபேவை காப்பற்று இருக்கலாம் என்று பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா ட்வீட் செய்துள்ளார். இந்த கருத்தை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

துப்பாக்கி குண்டுகள்
ஆனந்த் மகேந்திர தனது ட்விட்டரில், "முதல் துப்பாக்கிக் குண்டு மிஸ் ஆனது. இரண்டாவதாக அவர் சூடும் வரை பொதுவான இடைவெளி இருந்தது. இதைப் பயன்படுத்தி ஷின்சோ அபேவை காப்பாற்றி இருக்கலாம். துப்பாக்கிச் சூடு நடத்தியவரைப் பிடிப்பதற்குப் பதிலாக அபேவை கவர் செய்து, அவரை தரையில் படுக்க வைத்து இருக்க வேண்டாமா? இப்படிச் செய்து இருந்தால் அவர் உயிர் பிழைத்து இருக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

ஒப்புக்கொள்கிறேன்
ஆனந்த மகேந்திராவின் இந்த கருத்து பலரும் பல விதமான பதிலை அளித்து வரும் நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி முக்தேஷ் சந்தர் இந்த கருத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர், "டெல்லியில் 5 வெவ்வேறு பிரதமர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்களின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பேற்றுள்ளேன். எனது அனுபவத்தில் நான் ஆனந்த் மகேந்திராவின் கருத்தை ஒப்புக்கொள்கிறேன். பல பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது" என்றார். ஜப்பான் போலீசாரும் பாதுகாப்பில் குறை இருந்ததை ஒப்புக் கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications