ஆஹா என்ன ரம்மியமான சாலை.. இதுமாதிரி சாலை போடுங்கப்பா.. டிரெண்ட் ஆகும் ஆனந்த் மகிந்த்ராவின் வீடியோ!
டெல்லி: இருபுறமும் உள்ள மரங்களால் உருவான சுரங்கம் மாதிரி காட்சி தரும் ஒரு ரம்மியமான சாலையின் வீடியோவை ஆனந்த் மகிந்திரா வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
நாடறிந்த தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா, ட்விட்டரில் படு ஆக்டிவாக இருப்பவர்.
அதிகம் தெரியப்படாத நபர்களின் அசாத்திய திறமைகள் மற்றும் ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகளை ஆனந்த் மகிந்திரா அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
நிதியில்லை பேனா சின்னம் அவசியமா? அந்த காசில் 6.5 கோடி பேருக்கு பேனா வாங்கி கொடுங்க! விளாசிய இபிஎஸ்!
ஆனந்த் மகிந்திரா
ஆனந்த் மகிந்திராவின் ட்விட் பதிவுகளும் நெட்டிசன்கள் மத்தியில் டிரண்ட் ஹிட் அடிக்கும். அந்த வகையில் நெட்டிசன்கள் மத்தியில் ஆனந்த் மகிந்திராவும் அவரது பதிவுகளும் பிரபலம். இந்த நிலையில் தான், ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இருபுறமும் பசுமை மிக்க மரங்களால் சூழப்பட்டுள்ள ஒரு சாலை உள்ளது. 16 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோ வாகனத்தில் பயணிக்கும் ஒருவரால் எடுக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் வெளியீடு
இருவழிச்சாலை போல இருக்கும் இந்த சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்த மரங்கள் நிற்கின்றன. வானம் தெரியாத அளவுக்கு மேல் புறமும் பச்சை இலைகளால் சூழப்பட்டுள்ளன. பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும் சாலையில் வாகனங்கள் சீறிக்கொண்டு செல்கின்றன. ஆனந்த் மகிந்திரா ட்விட்டரில் பதிவிட்ட இந்த வீடியோ சில மணி நேரங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமாக பார்வையாளர்களை கடந்துள்ளது. இதேபோல் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை வாங்கியுள்ளது.
நிதின் கட்காரிக்கு கோரிக்கை
இந்த வீடியோ பதிவோடு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு கோரிக்கை ஒன்றையும் ஆனந்த் மகிந்திரா வைத்துள்ளார். ஆனந்த் மகிந்திரா வெளியிட்டுள்ள பதிவில், 'எனக்கு சுரங்கங்கள் பிடிக்கும்... வெளிப்படையாக சொல்வதென்றால், நான் இந்த வகையான 'ட்ரன்னல்' வழியாக செல்ல மிகவும் விரும்புகிறேன். நிதின் கட்காரி, நீங்கள் அமைக்கும் புதிய ஊரக சாலைகளில் இதுபோன்ற டிரன்னல்களை நாம் திட்டமிடலமா?" என்று பதிவிட்டுள்ளார்.
'உலகின் இயற்கையான சுரங்கம்'
ஆனந்த் மகிந்திராவின் இந்த ட்விட் பதிவை ஷேர் செய்து வரும் நெட்டிசன்கள் லைக்குகளையும் அள்ளி தெளித்து வருகின்றனர். இந்த பதிவுகளுக்கு கீழே நெட்டிசன்கள் தங்கள் கருத்தையும் வெளியிட தவறவில்லை. நெட்டிசன் ஒருவர் கூறுகையில், ''உலகின் இயற்கையான சுரங்கம்'' என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒருவர் 'இந்த சாலையில் பயணித்தால் குளு குளு என இருக்கும்' என்று பதிவிட்டுள்ளார். மேலும் நெட்டிசன்கள் பலரும் வெளியிட்ட பதிவுகளில், இது போன்ற சாலைகள் மத்திய பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் பகுதியில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
நெட்டிசன்கள் விமர்சனம்
காஷ்மீரில் பல சாலைகள் இப்படி இருப்பதாகவும் கேரளாவில் இதுபோன்ற சாலைகளை அதிகம் காணலாம் எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். டேராடூன் - ஹரித்வார் சாலையின் இருபுறமும் இப்படித்தான் இருக்கும் நான் அடிக்கடி பயணித்து இருக்கிறேன் என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும், குண்டும் குழியுமாக காணப்படும் பல சாலைகளையும் இந்த பதிவுக்கு கீழே போட்டு நெட்டிசன்கள் போட்டு விமர்சித்தும் உள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கருத்து
முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி, மரங்களின் சுரங்கமாக காட்சியளிக்கும் இந்த பதிவு குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். தினேஷ் திரிவேதி கூறுகையில், ''மரங்கள் வலுமிக்கதாக இல்லையென்றால் வாகனங்கள் மீது அவை விழும். நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்படும். எனவே, இவை அனைத்தும் அப்பகுதிகளில் உள்ள மண் மற்றும் தட்ப வெப்ப நிலை, அது என்ன வகையான மரம் என்பதை பொறுத்ததே.. நிச்சயமாக பாதுகாப்பானது என்றால், இத்தகைய சாலைகள் பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்