அரசியல் களத்திற்கு வரும் காந்தி குடும்பத்தின் அடுத்த வாரிசு! பிரியங்கா மகனுக்கு சிவப்புக் கம்பளம்!
டெல்லி: ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வரிசையில் காங்கிரசின் அடுத்த வாரிசாக ரெஹான் காந்தி அடையாளம் காட்டப்பட்டிருப்பதாக அக்கட்சியின் தலைமை வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
சுதந்திரத்திற்கு பிறகு முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சி நேரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நேரு தனது மகள் இந்திராவின் பெயருடன் காந்தியை சேர்த்து வைத்ததால், பிறகு அது காந்தி குடும்பமானது.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்திக்கு பிறகு காங்கிரசை காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் வழி நடத்த முன்வராத நிலையில் அக்கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. பிறகு சோனியா காந்தி வந்த பிறகு 2004 முதல் 2014 வரை தொடர்ந்து பத்து வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்தது. சோனியாவிற்கு பிறகு ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ஆனார்.
ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

பிரியங்கா காந்தி
தற்போதும் கூட காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருக்கிறார். இதனிடையே சோனியாவின் மகளும், ராகுலின் சகோதரியுமான பிரியங்காவும் தீவிர அரசியலுக்கு வந்துள்ளார். தற்போது காங்கிரஸ் பொதுச் செயலாளராக உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராக பிரியங்கா சுற்றிச் சுழன்று வருகிறார். இந்த நிலையில் தான் பிரியங்காவின் மகன் ரெஹான் வத்ரா அடுத்த வாரிசாக களம் இறங்க உள்ளதற்கான சாத்தியக்கூறுகள் தெரிய ஆரம்பித்தன.

ரெஹான் வத்ரா வருகை
தற்போது 20 வயதே ஆகும் ரெஹான் லண்டனில் படித்து வருகிறார். அதே நேரத்தில் ஐ பார்லியாமென்ட் என்கிற அரசியல் ரீதியிலான இயக்கம் ஒன்றிலும் ரெஹான் ஆக்டிவாக இருக்கிறார். நாடாளுமன்றம் கூடும் போது, ஒன்று சேரும் இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் நாட்டிற்கு எந்தமாதிரியான சட்டங்கள் தேவை என்று விவாதம் நடத்தும் வேலையை தற்போது செய்து வருகின்றது. இந்த நிலையில் தான் அண்மையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வீடியோவில் ரெஹான் வத்ரா முக்கிய இடம் பிடித்துள்ளார்.

காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ
கடந்த வெள்ளியன்று ஜன் ஜக்ராம் அபியான் எனும் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை விளக்கும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டது. அந்த வீடியோவில் தான் ஒரு எஸ்யுவி காரில் தனது தாய் பிரியங்காவுடன் நின்று கொண்டு காங்கிரஸ் கொடியை பிடித்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இது தான் ரெஹானின் அதிகாரப்பூர்வமான முதல் அரசியல் நகர்வு என்கிறார்கள். அதாவது காங்கிரசின் அடுத்த வாரிசு யார் என்பதை தற்போதே அக்கட்சி காட்டிவிட்டதாக சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அரசியல் பிளான்
லண்டனில் படித்து வரும் ரெஹானை காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ வீடியோவில் பயன்படுத்துவது என்பது எதேச்சையான ஒன்று இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதே சமயம் இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள், வீடியோவில் இடம்பெற்ற காரணத்தினால் ரெஹான் அரசியல் களம் புகுவார் என்று கூறிவிட முடியாது என்று விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் 2004க்கு முன்பு வரை ராகுல் காந்தியும் கூட அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறியது இல்லை. இதே போலத்தான் உத்தரபிரதேச அரசியலில் தற்போது புகுந்து விளையாடி வரும் பிரியங்காவும் கூட தீவிர அரசியலுக்கு வரப்போவதில்லை என்றே கூறி வந்தார். அந்த வரிசையில் தற்போது காந்தி குடும்பத்தின் ரெஹான் வத்ராவும் இடம்பிடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications