‛இந்தியா’ கூட்டணிக்கு அடுத்த ஷாக்.. பீகார் சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி போட்டி! அலறவிடும் கெஜ்ரிவால்
டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணியை எதிர்க்க 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளது. ‛இந்தியா' கூட்டணியில் சரத்பவாரின் நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அடுத்ததாக அரவிந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கை என்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பாஜகவை ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் எதிர்க்கட்சிகள் பேதங்களை மறந்து ஒன்றிணைந்துள்ளன.

கட்சி பாகுபாடுகளை மறந்து நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் 26 கட்சிகள் ஒன்றாக இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா(உத்தவ் தாக்கரே) 2 கம்யூனிஸ்ட்டுகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்பட 26 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியின் 2 ஆலோசனை கூட்டம் முடிந்துள்ளது. 3வது ஆலோசனை கூட்டம் இந்த மாத இறுதியில் மும்பையில் நடைபெற உள்ளது. இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார், சிவசேனா(உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே தலைமை வகிக்க உள்ளனர். இந்த கூட்டத்தில் ‛இந்தியா' கூட்டணியின் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
இதற்கிடையே தான் சரத்பவாரால் ‛இந்தியா' கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து மகாராஷ்ட்ராக துணை முதல்வராகி உள்ளார். இருப்பினும் சரத்பவார் அவருடன் நெருக்கம் காட்டி வருகிறார். ரகசியமாக கூட இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதாவது அஜித் பவார் மூலம் சரத்பவாரை பாஜகவின் கூட்டணிக்கு இழுக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் சரத்பவார் தான் பாஜகவின் பக்கம் சாயமாட்டேன் என கூறுவதோடு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீதும் அவர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். இதனால் சரத்பவாரின் நடவடிக்கை என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இத்தகைய சூழலில் தான் தற்போது ஆம்ஆத்மி கட்சியால்‛இந்தியா' கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளது. டெல்லியில் இன்று பீகார் மாநில ஆம்ஆத்மி தலைவர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சந்தீப் பதாக் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பீகாரில் கிராமங்கள் தோறும் கட்சியை வளர்த்து பீகார் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சந்தீப் பதாக் கூறுகையில், ‛‛பீகார் மாநில அரசியலால் அம்மாநிலம் முன்னேற்றம் அடையவில்லை. இது பீகாரின் துரதிர்ஷ்டம். ஆம்ஆத்மி கட்சி பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம். எந்த தேர்தலில் போட்டியிடுவோம் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் அதற்கு முன்பாக கட்சிக்கு கட்டமைப்பு வேண்டும். அதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளோம். கிராமங்கள் தோறும் கட்சிக்கு கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார். இதன்மூலம் பீகார் சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிட தயாராகி வருவது உறுதியாகி உள்ளது.
பீகாரை பொறுத்தமட்டில் முதலில் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடந்தது. நிதிஷ் குமார் முதல்வராக இருந்தார். ஆனால் கடந்த ஆண்டு அவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளார். 2025 தேர்தலிலும் இவர்கள் சேர்ந்து போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே தான் ஆம்ஆத்மியும் போட்டியிட்டால் ஓட்டுக்கள் பிரியும். இது பாஜகவுக்கு சாதகமாக கூட மாறிப்போகலாம். இது தற்போது புதிய பிரச்சனையாக உருவாகி உள்ளது. மேலும் ‛இந்தியா' கூட்டணி உருவாக முதன்மையான காரணமாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தான் இருந்தார். இத்தகைய சூழலில் ஆம்ஆத்மி கட்சியின் இந்த அறிவிப்பு என்பது ‛இந்தியா' கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே பீகாரில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிட திட்டமிட்டு இருப்பது பற்றி லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் எம்பி மனோஜூம் கூறுகையில், ‛‛இந்தியக் கூட்டணிக்கு அடித்தளமிடும் போது, சில கொள்கைகள் உருவாக்கப்பட்டன. இந்தக் கொள்கைகள் பற்றி விரிவாக பேசப்பட்டது. அதனை ஆம்ஆத்மி கடைப்பிடிப்பார்கள் என நினைக்கிறேன்'' என்றார்.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நீரஜ் குமார் கூறுகையில், ‛‛ஒவ்வொரு கட்சியும் தங்களை விரிவுப்படுத்த நினைக்கும். அதற்கு அனைத்து வித உரிமையும் உண்டு. ‛இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மாநில அளவில் உள்ள மோதல் போக்குகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications