"பலாத்காரம் செய்யுங்க.." சொன்னதே பெண்கள் தான்.. அடுத்து நடந்த கொடூரம்! மணிப்பூரில் மற்றொரு பயங்கரம்
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட சம்பவம் நடந்த அதே நாளில் மற்றொரு கொடூர பாலியல் பலாத்கார சம்பவமும் அரங்கேறியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கொடூரம் பற்றித் தான் நாடு முழுக்க பேச்சாக இருக்கிறது. அங்கே கடந்த 2.5 மாதங்களுக்கு மேலாகக் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
கடந்த மே மாதம் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களின் ஆடைகளை வலுகட்டாயமாக களைந்த கும்பல் அவர்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது. மேலும், அவர்களை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளது.

மணிப்பூர் வன்முறை: இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியிருந்தது. இது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தலைவர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் அவமானம் என்று பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருந்தார். அதேபோல மணிப்பூரில் வன்முறையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சுப்ரீம் கோர்ட் தலையிடும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதன் பிறகு வழக்குப்பதிவு செய்த போலீசார் இது தொடர்பாகச் சிலரைக் கைது செய்துள்ளனர். இதனிடையே மணிப்பூரில் நடந்த மற்ற கொடூரங்கள் குறித்து இப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. அதுவும் பெண்களை ஆடைகளின்றி நிர்வாணமாக அழைத்துவரப்பட்ட அதே நாளில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
கொடூரம்: அதே நாளில், அங்கு காங்போக்பி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் கொடூரமாக அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் கொல்லப்பட்டவர்கள் 21 மற்றும் 24 வயதே ஆன இளம்பெண்கள் ஆகும். இந்த பெண்கள் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் கொனுங் மாமாங் பகுதியில் கார் வாஷ் கடையில் வேலை செய்து வந்துள்ளனர்.
அன்றைய தினம் வழக்கம் போல கார் வாஷ் கடையில் இருந்த இரண்டு பெண்களை மிகப் பெரிய கும்பல் சூழ்ந்து தாக்கியுள்ளது. அந்த கும்பலில் சில பெண்களும் இருந்துள்ளனர். அன்று அங்கு என்ன நடந்தது என்பது குறித்த தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் அங்கு பணிபுரியும் ஆண் விளக்கியுள்ளார். அவர் கூறிய தகவல்கள் நெஞ்சை உலுக்கும் வகையில் இருக்கிறது.
அதாவது அந்த கும்பலில் இருந்த பெண்களே பாதிக்கப்பட்டவர்களை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து இரு பெண்களையும் அவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த பெண்கள் சத்தம் போடக் கூடாது என்று வாயைத் துணிகளால் அடைத்துள்ளனர். சுமார் மூன்றரை மணி நேரம் இந்த கொடூரம் நீடித்துள்ளது. அந்த பிறகு அந்த பெண்கள் உயிரற்ற உடல்களாக வெளியே வீசப்பட்டுள்ளனர்.
1.5 மணி நேரம் நீடித்த கொடூரம்: அவர்களின் ஆடைகள் கிழிந்து இருந்தன. தலைமுடி கொடூரமாகப் பிடுங்கப்பட்டு... உடல் முழுக்க ரத்த வெள்ளத்தில் இருந்தது. இது குறித்து முதலில் யாரும் புகார் அளிக்கவில்லை. இருப்பினும், அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோரில் ஒருவர் இது குறித்துக் கடந்த மே 16ஆம் தேதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது மகள் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாகப் புகாரில் கூறியிருந்தார்.

இந்தச் சம்பவம் நடந்து 1.5 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இதுவரை இந்தச் சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும், இந்த கொடூரம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திலும் இரண்டு சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். நெஞ்சை உலுக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களில் பல ஆயிரம் குற்றங்கள் நடந்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒவ்வொன்றாக இப்போது தான் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.. தவறு செய்த அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications