நேரு குறித்து பாஜக அமைச்சர் சர்ச்சை.. யார் இந்த சின்ன பையன்?.. லோக்சபாவில் நடந்த காரசார மோதல்!
டெல்லி: முன்னாள் பிரதமர் நேரு குறித்து மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் இன்று லோக்சபாவில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் விவசாயம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்களால் பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் இரண்டு நாட்களாக அவையில் பெரிய அளவில் அமளி ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று கொரோனா பிஎம் கேர் நிதி தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பினார்கள். பிஎம் கேர் நிதி வெளிப்படையாக இல்லை. இதில் மத்திய அரசு முறைகேடு செய்துள்ளது என்று கூறினார்கள்.
காஷ்மீரில் 3 பேர் என்கவுண்டர்.. விதியை மீறிய இந்திய ராணுவ வீரர்கள்..ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு
என்ன பதில்
இதற்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், பிஎம் கேர் வெளிப்படைத் தன்மையோடுதான் இருக்கிறது. இதில் என்ன தவறு உள்ளது. இது மக்கள் கொடுத்த பணம். மக்களுக்கான பணம். கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யவே இந்த நிதி பயன்படுகிறது. உச்ச நீதிமன்றமே இதில் எந்த தவறையும் கண்டுபிடிக்கவில்லை.
தொண்டு நிறுவனம்
பொது தொண்டு நிறுவனம் என்று முறையாக இதை பதிவு செய்து இருக்கிறோம். இதில் எல்லாம் வெளிப்படையாக உள்ளது. மாறாக முன்னாள் பிரதமர் நேரு 1948ல் உருவாக்கிய பிரதமர் தேசிய நிவாரண நிதி முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதில் வெளிநாட்டு நிதியை பெற முறையாக அனுமதி அளிக்கப்படவில்லை. இதை ஒரு குடும்ப நிதி போலவே காங்கிரஸ் பயன்படுத்தியது.
குடும்பம் நிதி
நேரு குடும்பத்தின் நிதி போல இதை நேரு, சோனியா,ராகுல் பயன்படுத்தினார்கள். இதை உடனே விசாரிக்க வேண்டும், என்று அனுராக் தாக்கூர் பேசினார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சை ஆனது. இவரின் பேச்சுக்கு உடனே காங்கிரஸ் தலைவர்கள் எழுந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பலவேறு கட்சித் தலைவர்கள் இவரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
காங்கிரஸ் கூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, யார் இந்த சின்ன பையன்? என்று கடுமையாக கேள்வி எழுப்பினார். அதோடு இவர் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். கோலி மாரோ மந்திரி (டெல்லி கலவரத்தின் பிரபலமான வாசகம்) உடனே பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் அவையில் பெரிய கூச்சல் குழப்பம் ஏற்பட்டு மாலை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் அவையில் பேசிய அனுராக் தாக்கூர்.. என்னுடைய பேச்சு யாரையாவது வருத்தத்திற்கு உள்ளாக்கி இருந்தால்.. அதனால் என் மனம் புண்படும் என்று கூறினார்.