குட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்
டெல்லி: ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை குடியரசுத்தலைவர் பிறப்பித்துள்ளார்.
ஆந்திரபிரதேசத்திற்கு கடந்த 2009 ம் ஆண்டு முதல் ஈ.எஸ்.எல்.நரசிம்மன் பதவி வகித்து வந்தார். ஆந்திரா மாநிலம் கடந்த 2014 ம் ஆண்டு இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. அப்போதும் ஈ.எஸ்.எல்.நரசிம்மனே ஆளுநராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவரது இடத்தில் பாஜக மூத்த தலைவர் விஸ்வ பூஷண் ஹரிசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திராவின் 23-ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இவர் கடந்த 1971-இல் பாரதிய ஜன சங்கத்தில் இணைந்து பணியாற்றியவர் அதன் பின்னர், பாஜகவில் பல்வேறு உயர் பொறுப்புகளையும் வகித்துள்ளார். 1980-88களில் ஒடிசாவின் மாநில தலைவராக பதவி வகித்துள்ளார். தற்போது ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இவருக்கு 84 வயது ஆகிறது.
சத்தீஸ்கர் மாநில ஆளுநராக இருந்த பல்ராம்தாஸ் டாண்டன், கடந்த ஆண்டு ஆகஸ்டில் காலமானார். இதையடுத்து, அம்மாநில ஆளுநர் பொறுப்பை மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம், சிந்த்வாராவைச் சேர்ந்த 62 வயதான அனுசுயா உய்க்கே சட்டீஸ்கர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அனுசுயா உய்கே பெண்களுக்கு, குறிப்பாக பழங்குடியின பெண்களின் நீதிக்காக குரல்கொடுத்து பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறார்.
இந்த துறையில் இவரது செயல்பாடுகள் குறிப்பிட தக்கவையாகும். இந்த இருமாநிலங்களின் புதிய ஆளுநர்கள் நியமன உத்தரவை குடியரசுத் தலைவர் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications