திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.. மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
டெல்லி: திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து திருவாரூர் தொகுதிக்கு கடந்த மாதம் 28ம் தேதி இடைத்தேர்தல் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.

அதனையடுத்து, திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து, அதற்கான உத்தரவையும் பிறப்பித்தது. இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் கே. கே. ரமேஷ்குமார் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார். திருவாரூர் தொகுதிக்கு பல மாதங்களாக தேர்தல் நடைபெறவில்லை. எனவே உடனடியாக தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
அந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சய் கோகோய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதாவது:
தேர்தலை நடத்துவது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றத்தால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மேலும், திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, அதைப் பற்றியும் எதுவும் கூற முடியாது என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications