மேகதாது அணை விவகாரம்.. தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்.. உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி:மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அனுமதியை திரும்ப பெறுமாறு வலியுறுத்தியது.

மேலும் அனுமதிக்கு தடை கோரி, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு, உச்ச நீதி மன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தன. மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிராக, தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடர்ந்தது.
அணை தொடர்பான, விரிவான திட்ட அறிக்கையை கடந்த 18ம் தேதி மத்திய நீர் ஆணையத்தின் திட்ட ஆய்வு நிறுவன தலைமைப் பொறியாளருக்கு, கர்நாடக நீர்வளத்துறையின் முதன்மைச் செயலாளர் அளித்தார். அதேபோல் உச்சநீதி மன்றத்தில் கர்நாடகா சார்பில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில்மனுவுக்கு 4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. மத்திய அரசும் 2 வாரத்தில் பதிலளிக்குமாறு ஆணயிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications