ஸ்டெர்லைட் வழக்கு.. நாளை ஜட்ஜ்மென்ட் டே… உச்சக்கட்ட டென்ஷனில் தூத்துக்குடி மக்கள்
Recommended Video
டெல்லி:பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே... தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. ஆலையால் சுகாதார சீர்கேடு, மக்கள் உடல் நலம் பாதிப்பு என்பதற்கான ஆதாரமோ, அறிக்கையோ மாநில அரசு ஏன் எங்களிடம் வழங்கவில்லை என்று வேதாந்தா நிறுவனம் வாதாடியது.
இதே போல் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், விஸ்வநாதன் மற்றும் குருகிருஷ்ணகுமார் ஆகியோர் வாதாடினர். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விட்டது.
ஏதேனும் தகவல் தெரிவிக்க விரும்பும் பட்சத்தில் அனைத்து தரப்பும் பிப்ரவரி 11ம் தேதிக்குள் தங்களின் எழுத்துப்பூர்வ வாதங்களை அறிக்கையாக தாக்கல் செய்யலாம் என்று கூறி நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 7ம் தேதி ஒத்திவைத்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசும், வேதாந்தா நிறுவனமும் கடந்த வாரம் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தது. இந் நிலையில் உச்ச நீதிமன்றம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது:
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பிப்ரவரி 18ம் தேதி அதாவது நாளை உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதிபதிகள் ரோகிங்க்டன் பாலி நாரிமன் மற்றும் வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்குகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலை மீண்டும் திறக்கப்படுமா? அல்லது தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை தொடருமா? என்பது இந்த தீர்ப்பில் தெரியவரும்.