நடைமுறைகளின் படிதான் நீதிபதி விக்டோரியா கவுரி நியமனம்.. அவதூறு பேசக்கூடாது..மத்திய அரசு விளக்கம்
நீதிபதி விக்டோரியா கவுரி நியமனம் பற்றி அவதூறாக பேசக்கூடாது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு கண்டிப்புடன் தெரிவித்தது.
டெல்லி: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி உரிய நடைமுறைகளின் படியே நியமனம் செய்யப்பட்டதாகவும் இதில் அவதூறாக பேசக்கூடாது என்றும் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியின் கேள்விக்கு மத்திய அரசு கண்டிப்புடன் பதிலளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அண்மையில் விக்டோரியா கவுரி பதவியேற்றார். விக்டோரியா நியமனத்திற்கு கடுமையான எதிர்ப்புகளும் எழுந்தன.
விக்டோரியா கவுரி நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. எனினும், இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நியமனம் சரியானதுதானா?
இதனிடையே, நீதிபதி விக்டோரியா கவுரி நியமன விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஜவஹர் சிர்க்கார் நேற்று பேசும் போது, "சாதிய கருத்துக்களயும் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களையும் கூறிய நீதிபதி விக்டோரியா கவுரி நியமனம் சரியானதுதானா? என்ற கேள்வியை முன்வைத்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியான ஜவஹர் சிர்க்காரின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

அவதூறாக பேசக்கூடாது
பியூஸ் கோயல் கூறுகையில், "சிறிது கண்ணியத்தை கடைப்பிடித்து பேச வேண்டும். நீதிபதி உரிய நடைமுறைகளின் படியே நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். எனவே எம்.பி இதுபோன்று அவதூறாக பேசக்கூடாது. இந்த விவகாரத்தில் அவைத்தலைவர் தலையிட வேண்டும்" என்றார். இதற்கு பதிலளித்து பேசிய மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், ஜனநாயகத்தில் 3 தூண்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

கிரண் ரிஜிஜூ பாராட்டு
அப்போதுதான் உரிய பலன் கிடைக்கும். குறிப்பிடும் நீதிபதியின் நியமனம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்து விட்டது. எனவே இந்த விவகாரத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். நீதித்துறை விதிகளை மனதில் வைத்துக்கொண்டு உறுப்பினர் கேள்விகளை முன்வைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்" என்றார். அப்போது குறுக்கிட்ட மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரின் நிலைப்பாட்டை பாராட்டி பேசினார்.

கருத்து வேறுபாடு என்ற கேள்வியே இல்லை
தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஜவஹர் சிர்க்கார் மற்றொரு கேள்வியையும் முன்வைத்தார். அதில், நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே கருத்தொற்றுமை இல்லையா? என்று வினவினார். இதற்கு பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, கருத்து வேறுபாடுகள் என்பது ஜனநாயகத்தில் ஒரு அங்கம்தான். இதற்கு தீர்வு காணவும் வழிமுறைகள் இருக்கின்றன. உயர் நீதிமன்றங்களில் இருக்கும் 210 காலியிடங்கள் பற்றி கொலிஜியத்திடம் இருந்து எந்த ஒரு பரிந்துரையும் வரவில்லை. எனவே கருத்து வேறுபாடு என்ற கேள்வியே இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications