போராடும் விவசாயிகளை கொரோனாவிலிருந்து காக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
டெல்லி: விவசாய போராட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளை கொரோனா பாதிப்பிலிருந்து காக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் மூன்று புதிய விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த விவசாய சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக உள்ளதாகக் கூறி விவசாயிகள் போராடி வருகின்றனர்.
40 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

குறுகிய இடத்தில் அதிக பேர்
இவர்கள் டெல்லியை சுற்றியுள்ள சாலைகளில் முகாம்களை அமைத்து, அங்கேயே தங்கி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் தற்போது மோசமான வானிலை நிலவுவதால், மழையிலிருந்த தப்ப விவசாயிகள் புதிய கூடாரங்களையும், கான்கிரீட் கட்டுமானங்களையும் கட்டி வருகின்றனர். இருப்பினும், குறுகிய இடத்தில் அதிக பேர் தங்க வேண்டியே சூழ்நிலையே அங்கு நிலவுகிறது. இதனால் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பலர் அச்சம் தெரிவித்திருந்தனர்.

என்ன நடவடிக்கை
இந்நிலையில், போராடும் விவசாயிகளை கொரோனாவிலிருந்து பாதுகாக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தப்லீக் ஜமாத் சம்பவத்திலிருந்து மத்திய அரசு எதையும் கற்றுக்கொள்ளவில்லையா என்ற கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே, விவசாயிகளின் போராட்டத்தில் இதே பிரச்சினை ஏற்படும் என்றும் தெரிவித்தார்

தப்லீக் ஜமாத்
கொரோனா பரவ தொடங்கிய போது, தப்லீக் ஜமாத் போன்ற நிகழ்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் எப்படி அனுமதியளிக்கலாம் என்று பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையிலேயே உச்ச நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்ததது.

கொரோனா பரவல்
கொரோனா பரவல் தொடங்கியபோது, கடந்த மார்ச் மாதம் டெல்லி தப்லீக் ஜமாத்தில் சமய மாநாடு ஒன்று நடைபெற்றது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன், நாடு முழுவதும் இருந்தும் பலர் கலந்து கொண்டனர். இந்தியாவில் கொரோனா பரவல் சீக்கிரமாக ஏற்பட இதுவும் ஒரு காரணமாகப் பார்க்கப்பட்டது.

ஒத்திவைப்பு
தலைமை நீதிபதியின் கேள்விக்கு, விவசாயிகளின் போராட்டத்தில் கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்கப்படும் என்று அரசு தலைமை நீதிபதி மேத்தா தெரிவித்தார். தலைமை நீதிபதி போப்டே மேலும் கூறுகையில், "கொரோனா சிக்கலைத் தீர்ப்பதே எங்கள் நோக்கம். கொரோனா நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.












Click it and Unblock the Notifications