"பயந்துவிட்டீர்களா மோடி".. அம்பானி- அதானி வீட்டுக்கு ED அனுப்புங்களேன்.. ராகுல் காந்தி பளீர் பதிலடி
டெல்லி: அம்பானி-அதானி உடன் காங்கிரஸ் சீக்ரெட் ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே ராகுல் காந்தி அவர்கள் குறித்துப் பேசுவதில்லை எனப் பிரதமர் மோடி விமர்சித்த நிலையில், இதற்கு வீடியோ மூலம் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 3 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 45 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அடுத்த தேர்தல் வரும் மே 13ஆம் தேதி 96 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடியாக மோதல் நிலவுகிறது.
பிரதமர் மோடி: தேர்தல் காரணமாகப் பிரச்சாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் ராகுல் காந்தி அம்பானி- அதானி குறித்துப் பேசுவதை நிறுத்திவிட்டதாகச் சாடியுள்ளார். மேலும், அம்பானி அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதாவது அவர், "கடந்த 5 ஆண்டுகளாகக் காங்கிரஸின் இளவரசர் (ராகுலை குறிப்பிடுகிறார்), தினமும் காலையில் எழுந்தவுடன் அம்பானி, அதானி என்று பேசுவதைப் பார்த்து இருப்பீர்கள்.. ரஃபேல் விவகாரம் அவருக்குக் கைகொடுக்கவில்லை என்பதால் இப்படி அம்பானி அதானி என்று பேசிக் கொண்டு இருந்தார். ஆனால், தேர்தல் ஆரம்பித்த அம்பானி-அதானி குறித்துப் பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார்..
அம்பானி- அதானி: நான் தெலுங்கானாவில் இருந்து ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன்.. அம்பானி- அதானியிடம் இருந்து ராகுல் காந்தி எவ்வளவு வாங்கினார்? தேர்தல் நிதியாக எத்தனை லாரிகளில் பணத்தைப் பெற்றீர்கள்.. இரவோடு இரவாக அம்பானி-அதானி குறித்துப் பேசுவதை நிறுத்திவிட்டீர்கள் என்றால் என்ன ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று சொல்லுங்கள். உங்கள் இருவருக்கும் இடையே என்ன டீலிங்.. இதற்கு நீங்கள் நாட்டு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று பேசியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்குக் காங்கிரஸ் கட்சி இதற்கு ஏற்கனவே பதிலளித்து இருந்தது. அம்பானி- அதானி குறித்துத் தேர்தல் பிரச்சாரங்களில் ராகுல் காந்தி பேசிய வீடியோக்களை தொகுத்து காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தது. இதற்கிடையே ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராகுல் காந்தி பதிலடி: அதில் அவர் , "மோடி ஜி வணக்கம்.. நீங்கள் பயந்துவிட்டீர்களா என்ன.. பொதுவாக நீங்கள் மக்களுக்குத் தெரியாமல் தான் அம்பானி, அதானி குறித்துப் பேசுவீர்கள். ஆனால், இந்த முறை முதன்முறையாகப் பொதுவெளியில் அம்பானி, அதானி குறித்துப் பேசியுள்ளீர்கள். அவர்கள் லாரியில் பணம் தருவது உங்களுக்கும் தெரிந்து இருக்கிறது பாருங்கள்.. இது என்ன உங்கள் தனிப்பட்ட அனுபவமா?
அப்படிப் பணம் கொடுத்தார்கள் என்றால் உடனே அவர்களிடம் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐயை அனுப்பி தீவிர விசாரணையை நடத்துங்கள்.. பாஜகவின் ஊழல் லாரியின் ஓட்டுநர் யார்.. உதவியாளர் யார் என்பது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியும்.
மீண்டும் சொல்ல விரும்புகிறேன்: நான் மீண்டும் சொல்கிறேன் நரேந்திர மோடி இந்த தொழிலதிபர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாரோ, அதே தொகையைக் காங்கிரஸ் கட்சி நாட்டின் ஏழைகளுக்கு வழங்கும். பாஜக 22 கோடீஸ்வரர்களை உருவாக்கியது, நாங்கள் கோடிக்கணக்கானவர்களை உருவாக்குவோம்" என்று ராகுல் காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications