சென்னை ஹைகோர்ட் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக ஏ.ஆர்.எல். சுந்தரேசன் நியமனம்!
டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக (ஏஎஸ்ஜி) மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரசேனை மத்திய அரசு வெள்ளிக்கிழமையன்று நியமித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக கடந்த 2020-ம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் சங்கர நாராயணனை மத்திய அரசு நியமித்திருந்தது. அதுவரை மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக சுமார் 6 ஆண்டுகள் பணியாற்றினார்.
சென்னை உயர்நீதிமன்றமானது கொரோன கால பிரச்சனைகளை தாமாக முன்வந்து விசாரித்தது. அவை உட்பட பல்வேறு மத்திய அரசு தொடர்பான வழக்குகளில் மத்திய அரசு சார்பாக வாதாடியவர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த சங்கர நாராயணன்.

இந்நிலையில் தற்போதைய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன், தென்னிந்திய மாநிலங்களுக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக ஏ.ஆர்.எல். சுந்தரேசனை மத்திய அரசு நியமித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான மறைந்த ஏ.ஆர். லட்சுமணின் மகன் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன். சென்னை பார் அசோசியேசன் எனப்படும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து தமிழக அரசு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை நியமித்திருந்தது. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞராகவும் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் பணியாற்றினார்.
தென் மாநிலங்களுக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள சங்கர நாராயணன், சென்னை உயர்நீதிமன்றத்துக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.எல். சுந்தரேசன் இருவரது பதவிக் காலமும் 3 ஆண்டுகள் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன்
தற்போதைய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசனின் தந்தை ஏ.ஆர்.லட்சுமணன், உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர். கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான் என பல மாநிலங்களில் பணியாற்றினார். 2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பல வழக்குகளை கையாண்டவர். பல நூல்களை எழுதிய இலக்கியவாதி நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன். கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த காலத்தில், பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவிலும் அவர் இடம் பெற்றிருந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி இறந்த மறுநாளே நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணனும் காலமானார்.












Click it and Unblock the Notifications