கமல்நாத் செஞ்சது தப்புதான்.. திருத்திக்கச் சொல்லிருக்கோம்.. ப.சிதம்பரம்
Recommended Video
டெல்லி: பசுக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை, மத்தியப் பிரதேச அரசு பிரயோகித்தது தவறு என்று அந்த மாநில முதல்வர் கமல்நாத்திடம் காங்கிரஸ் மேலிடம் கூறியுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கமல்நாத்திடம் ராகுல் காந்தி பேசியுள்ளார். அதை சரி செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அது சரி செய்யப்படும் என்றும் ப.சிதம்பரம் கூறினார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் கூறுகையில், மத்தியப் பிரதேச அரசு எடுத்துள்ள நடவடிக்கை சரியல்ல என்று அவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரியவர்களுடன் காங்கிரஸ் தலைவர் பேசியுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் இதுபோல நடந்திருப்பது தவறுதான். எனவே அதை சரி செய்து விடுவார்கள் என்றார்.
தான் எழுதிய Undaunted - Saving The Idea of India என்ற நூல் வெளியீட்டு விழாவின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார் ப.சிதம்பரம். முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி புத்தகத்தை வெளியிட்டார். பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா, அகமது படேல் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் மேலும் ப.சிதம்பரம் பேசுகையில், நாட்டின் ஜனநாயக அமைப்புகள் ஒவ்வொன்றாக வீழ்ந்து கொண்டுள்ளன. அடுத்து தேர்தல் ஆணையம்தான் பலியாகப் போகிறது. இதோ மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ. 2000 ஆதரவு விலையை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் பிப்ரவரி 28ம் தேதி அமல்படுத்தப்படும். தேர்தல் ஆணையம் மார்ச் 4 அல்லது 5ம் தேதி தேர்தலை அறிவிக்கலாம். ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டம் என்று கூறி 2ம் கட்ட ஆதரவு விலையை கொடுக்க மத்திய அரசு அனுமதி கேட்கும். தேர்தல் ஆணையம் அதை அனுமதித்தால், தேர்தல் ஆணையமும் விழுந்து விட்டது என்பது ஊர்ஜிதமாகும்.
இந்தியாவில் என்ன நடந்து கொண்டுள்ளது என்று நான் 2015ம் ஆண்டிலிருந்தே எழுதி வருகிறேன். அதை 2018 முதல் இந்தியாவுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று மாற்றினேன். என்ன நடக்கிறது என்பது, சரி செய்து விடக் கூடிய பிரச்சினைதான். ஆனால் நாட்டுக்கு என்ன நடக்கிறது என்பது சரி செய்ய முடியாத பிரச்சினையாகும். உரிய நேரத்தில் அதைத் தடுக்காவிட்டால் இறுதி வரை அதை சரி செய்ய முடியாமலேயே போகும் என்றார் ப.சிதம்பரம்.