சிங்கப்பூரில் திரிபு வைரஸ்.. குழந்தைகளுக்கு ஆபத்து .. விமானத்தை நிப்பாட்டுங்க.. கெஜ்ரிவால் கோரிக்கை
டெல்லி: சிங்கப்பூரில் புதிய திரிபு வைரஸ் கண்டறியப்பட்டதால் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார் .
இந்தியாவில் முதல் அலையை போல் அல்லாமல் கொரோனா இரண்டாவது அலையின் அலை மிக கடுமையாக இருக்கிறது.
இது தவிர மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று ஆராய்ச்சி நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மூன்றாவது அலை அபாயம்
கொரோனா 2-வது அலையில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் புதிய தலைமுறையினரை அதிகம் பாதிப்பதுதான். தற்போது சில குழந்தைகளை பாதித்துள்ள நிலையில் மூன்றாவது அலையில் அதிகளவு குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் நிபுணர்கள். குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று கருத்துக்கள் வலுத்து வருகின்றன.
குழந்தைகளை பாதிக்கும்
கடந்த வாரம் 12 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியை அமெரிக்கா அங்கீகரித்தது. ஆனால் பெரும்பாலான நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஒப்புதல் அளிக்கவில்லை. மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் ஏற்கனவே மூன்றாவது அலைக்கு தயாராகி வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் குழந்தைகள் பராமரிப்பு மையங்களை அமைத்து வருகிறது.
சிங்கப்பூரில் புதிய வைரஸ்
சிங்கப்பூரில் புதிய வகை வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பெரும்பாலான நாடுகளில் மூன்றாவது அலையை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய வைரஸ் பரவி வருவதால் சிங்கப்பூரில் இருந்து விமானங்களை நிறுத்த வேண்டும் என்றும் இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னுரிமை அளியுங்கள்
இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறுகையில், 'சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய வடிவம் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது, இந்தியாவில் இது மூன்றாவது அலையாக வரக்கூடும் என்றும் கூறுகிறார்கள். என்வே மத்திய அரசு சிங்கப்பூரில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இந்தியாவில் நடைமுறையில் உள்ள தடுப்பூசிகளுக்கு குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.