தலைநகரில் நிலைமை படுமோசம்.. கொரோனா சிகிச்சை மையமாக மாறும் காமன்வெல்த் விளையாட்டு கிராமம்!
டெல்லி: கொரோனா அதிகரித்து வருவதால் டெல்லியில் உள்ள பள்ளிகள், காமன்வெல்த் விளையாட்டு கிராமம் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் கொரோனா கடந்த 2 நாட்களில் தொடர்ந்து 2,50,000-க்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.
அதாவது உலகில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான அமெரிக்காவின் தினசரி பாதிப்புகளை விட இந்தியாவின் தினசரி பாதிப்பு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

டெல்லியை படுத்தும் பாடு
நாட்டின் தலைநகர் டெல்லியை போட்டு கொரோனா பாடாய்படுத்தி வருகிறது. டெல்லியில் தினமும் 20,000-க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் வருகின்றன. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 90% படுக்கைகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவுகளில் வென்டிலேட்டர்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகள் முழுவதுமாக நிரம்பி விட்டன.

மருந்து, படுக்கைகள் தட்டுப்பாடு
மேலும் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள பள்ளிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

100 படுக்கைகள் மட்டுமே காலி
டெல்லியில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் 100 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. எங்களுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகள் தேவை. வரும் நாட்களில் 6,000 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் படுக்கைகள் இருந்தால்தான் நிலைமையை சமாளிக்க முடியும். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுடன் பேசியுள்ளேன்.

காமன்வெல்த் கிராமம் மாறுகிறது
டெல்லியில் மத்திய அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 10,000 படுக்கைகள் உள்ளன, அவற்றில் சுமார் 1,800 படுக்கைகள் மட்டுமே கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. குறைந்தது 7,000 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய 6,000 படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்வோம். காமன்வெல்த் விளையாட்டு கிராமம் மற்றும் சில பள்ளிகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றி வருகிறோம். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications