நிலைமை மோசமாகுது.. இரண்டு பத்தாது.. கூடுதல் தடுப்பூசிகள் தயாரிக்கணும்.. மோடிக்கு, கெஜ்ரிவால் கடிதம்
டெல்லி: இந்தியாவில் தடுப்பூசிகள் தயாரிப்புக்கு கூடுதல் நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவேக்சின், புணே சீரம் நிறுவனத்தின் கோவிஷில்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
கொரோனா சிகிச்சையில் ஐவர்மெக்டின்.. நேற்று அனுமதி அளித்த கோவா.. இன்று எச்சரிக்கும் உலக சுகாதார மையம்
ரஷ்யாவின் 'ஸ்பூட்னிக் வி' தடுப்பூசிக்கும் இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த தடுப்பூசி இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.
மோடிக்கு கடிதம்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசிகள் பற்றாக்குறையால் மக்களுக்கு தடுப்பூசி போட முடியாமல் தவித்து வருகின்றன. தடுப்பூசிகள் தயாரிப்புக்கு கூடுதல் நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தேசிய திட்டம்
இந்தியாவில் தற்போது இரண்டு நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. அவை மாதத்திற்கு ஆறு முதல் ஏழு கோடி தடுப்பூசிகள் மட்டுமே உற்பத்தி செய்கின்றன. இதே நடைமுறையில் சென்றால் அனைவருக்கும் தடுப்பூசி போட சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதற்குள் நாட்டில் பலகொரோனா அலைகள் வந்துவிடும். தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது முக்கியமான ஒரு தேசிய திட்டமாகும்.
கூடுதல் நிறுவனங்கள் வேண்டும்
ஒவ்வொரு இந்தியருக்கும் அடுத்த சில மாதங்களில் தடுப்பூசி போடப்பட வேண்டும். எனவே இந்தியாவில் தடுப்பூசிகளை தயாரிக்க பல நிறுவனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசு தற்போதுள்ள இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசி பார்முலாவை மற்ற நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இதனால் விருப்பமுள்ள நிறுவனங்கள் தடுப்பூசிகளை பாதுகாப்பாக தயாரிக்க முடியும்,
பற்றாக்குறை இருக்கிறது
இந்த கடினமான காலத்தில் இதைச் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. டெல்லியில் ஒவ்வொரு நாளும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி போடுகிறோம். மூன்று மாதங்களுக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் நாங்கள் கடுமையான தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.