'அதிகரிக்கும் கொரோனா'. . பரிசோதனையை அதிகப்படுத்துங்க. . 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் கடிதம்!
டெல்லி: இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், கொரோனா பரிசோதனையை துரிதப்படுத்துமாறும், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்குமாறும் இம்மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவுக்குள் நுழைந்த கொரோனா இன்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரவிக்கொண்டு தான் இருக்கிறது.
நாட்டில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்ட காரணத்தால் மிக வேகமாக பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போதும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவிக்கொண்டு தான் இருக்கிறது.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு கடிதம்
7 மாநிலங்களில் அதிகம்
அந்த வகையில், இந்தியாவில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, டெல்லி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய 7 மாநிலங்களில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொடர்ந்து இந்த 7 மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாலும், பண்டிகை காலம் தொடங்க இருப்பதால் மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து அதிகரித்து தொற்று பரவல் மேலும் அதிகரித்து விடக்கூடாது என்பதாலும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூசன் மேற்கண்ட 7 மாநிலங்களுக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு கடிதம் அனுப்பியுள்ளது.
மத்திய அரசு கடிதம்
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ''நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்க இருக்கும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் காரணமாக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து அதிகரிக்கும். இதனால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அபாயம் உள்ளது. எனவே தற்போதே கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு தீவிரம் காட்ட வேண்டும். குறிப்பாக மாநிலங்கள் ஆர்டி-பிசிஆர் மற்றும் ஆன்டிஜென் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் மாநில சந்திப்புகளில் பஸ்நிலையம், ரெயில் நிலையங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் அமைத்து கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். இதேபோல் தொற்று அதிகம் பரவும் மாவட்டங்களை கண்டறிந்து அந்த மாவட்டங்களில் அதிக பரிசோதனைகள் நடப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில்
இது தொடர்பாக டெல்லிக்கு எழுதிய கடிதத்தில், ''தலைநகர் தினசரி புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 811 ஆக உள்ளது. ஆகஸ்டு 5-ந்தேதி அன்று மட்டும் டெல்லியில் அதிகபட்சமாக 2,202 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த மாத இறுதியில் 802 ஆக இருந்த ஒரு நாள் பாதிப்பு தற்போது 1492 ஆக அதிகரித்துள்ளது. இது அகில இந்திய அளவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் டெல்லியின் பங்களிப்பு 8.2 சதவீதமாக உள்ளது" என்று கூறியுள்ளது.
தமிழகத்தில். .
இதேபோல் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழகத்துக்கு அனுப்பிய கடிதத்தில், ''கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 2,044 பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவின் வாராந்திர தொற்று பரவல் கணக்குப்படி பார்க்கும் போது, அகில் இந்திய அளவில், கொரோனாவுக்கு புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையியில் தமிழகத்தின் பங்கு 7.7 சதவீதம் ஆகும். மாவட்ட அளவில் பரிசோதனை எண்ணிக்கையை பார்க்கும் போதும் 26 மாவட்டங்களில் பரிசோதனை எண்ணிக்கை குறைவாக தெரிகிறது.
தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துங்கள்
எனவே பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். இதேபோல் ஆர்.டி.பி.சி.ஆர். மற்றும் ஆன்டிஜென் சோதனைகள் மேற்கொள்வதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக எந்தெந்த மாவட்டங்கள் தொற்று அதிகமாக பரவுகிறதோ அந்த மாவட்டங்களை அரசு உற்று கவனிக்க வேண்டும். தடுப்பூசி போடுவதையும் அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக மாநிலங்களுக்கு இடையேயான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகள விதித்து அரசு கண்காணிக்க வேண்டும். இதேபோல் தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு போடவும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்புசிபோடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
Recommended Video
மகாராஷ்டிரா, கர்நாடகா. .
இதேபோல் கடந்த மாதத்தில் மட்டும் சராசரியாக கேரளாவில் ஒரு நாளைக்கு 2,347 பேரும், மகாராஷ்டிராவில் 2,135 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இனி வரும் மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளதாலும், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து அதிகரிக்கும் என்பதாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.