"கருப்பு படம் பார்க்கும் ரசிகர்கள் சாமியாடும் நேரத்தில் வீடியோ எடுக்காதீங்க" - சூர்யா வேண்டுகோள்!
சென்னை: 'கருப்பு' திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் கருப்பசாமியைக் கண்டு பரவசமடைவோரை வீடியோ எடுக்கவேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரமாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் முதல் 3 நாட்களில் 147 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா ரவி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த வாரம் வெளியான 'கருப்பு' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் போது, திரையரங்குகளில் சில ரசிகர்கள் சாமியாடும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சினிமா என்பதையும் தாண்டி, மக்கள் இதை ஒரு ஆன்மீக பரவச அனுபவமாக கொண்டாடி வருகிறார்கள்.
நாட்டார் தெய்வமான கருப்பசாமி குறித்த காட்சி என்பதால் தமிழகம் முழுக்க பல திரையரங்குகளில் படம் பார்த்த மக்கள் பரவசமடைந்து சாமியாடும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் சூர்யா, ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "Karuppu திரைப்படத்திற்கு ஏற்பட்ட தடைகளைத் தாண்டி முழு ஆதரவு தந்து, வெற்றிகரமாகத் திரையிட்டுவரும் என் அன்பிற்குரிய திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியீட்டிற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விநியாகஸ்தர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
மேலும், திரையரங்குகளில் கருப்பசாமியைக் கண்டு பரவசமடைபவர்களுக்கு, உரிய முதலுதவி வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த நேரத்தில் மற்றவர்கள் அதை வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுருத்த அன்போடு வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications