மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? பிரியங்கா காந்தி
டெல்லி: டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. இதனையடுத்து பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து போலீசார் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜாமியா மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெல்லி இந்தியா கேட் முன்பு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி திடீரென தர்ணா போராட்டம் நடத்தினார்.
அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோணி, அகமது படேல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 2 மணிநேரம் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பிரியங்கா காந்தி கூறியதாவது:
இளைஞர்களும் மாணவர்களும் நாட்டின் ஆன்மா போன்றவர்கள். அந்த ஆன்மா மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜாமியா பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து நூலகம் உள்ளிட்டவற்றை போலீசார் நாசமாக்கியுள்ளனர்.
மாணவர்களுக்கு போராடுகிற உரிமை உள்ளது. நாம் வாழ்வது ஜனநாயக நாட்டில்... சர்வாதிகார நாட்டில் அல்ல. குடியுரிமை சட்ட திருத்தம் மூலம் இந்திய அரசியல் சாசனத்தின் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜாமியா மாணவர்கள் மீதான போலீசார் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? இவ்வாறு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications