ரபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பல்டி
டெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்படவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பல்டியடித்துள்ளது.
ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் 14ம் தேதி தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு மீதான விசாரணை கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, ரபேல் ஆவணங்கள் ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த தகவல் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திருட்டு ஆவணங்களை தி ஹிந்து ஆங்கில பத்திரிகை வெளியிட்டதாகவும், அரசு ரகசியங்களை வெளியிட்டது, சட்டப்படி குற்றம் என்றும் அவர் வாதிட்டார்.
இந்த தகவல் அடிப்படையில், மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ரபேல் ஆவணங்களையே பாதுகாக்க முடியாத பிரதமரா இந்த நாட்டை காப்பாற்றப்போகிறார் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, மத்திய அரசு தரப்பிலும் அட்டார்னி ஜெனரல் மீது அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நேற்றைய விசாரணையின்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.
நேற்று அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தனது வாதத்தில் கூறியதாவது: ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டதுபோல் எதிர்க்கட்சிகள் கூறுவது முற்றிலும் தவறானது. உச்சநீதிமன்றத்தில் யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுடன் 3 ஆவணங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. அவை ரபேல் தொடர்பான அசல் ஆவணங்களின் நகல்கள்.
இந்த நகல்களை ஊடகம் பயன்படுத்தி உள்ளது, என்ற பொருளில்தான் நான் கூறினேன். எனவே, ரபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications